நற்றிணை - 180. மருதம்
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை கழனி நாரை உரைத்தலின், செந்நெல் விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே; மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே |
5 |
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த புன்னை விழுமம் போல, என்னொடு கழியும்- இவ் இருவரது இகலே. |
வயலருகிலிருக்கின்ற பலாமரத்திலுள்ள இலைகளைக் கூடாக்கி முயிறுகள் முட்டையிட்டு நெருங்கியுறைகின்ற அக் கூடுகளை; கழனி நாரை உரைத்தலின் கழனியின்கண்ணே இரையுண்ணுமாறு போந்த நாரை சென்றிருந்து உரிஞ்சுதலானே; அம் முயிறுகளும் அவற்றின் முட்டைகளும் மழுக்கியபடியுள்ள சிவந்த நெல்லொடு கலந்த அரிசியுதிர்ந்து பரவினாற்போல உதிர்ந்து பரவாநிற்கும் வயல்சூழ்ந்த ஊரையுடைய தலைவன்; பரத்தை மகளிர் பலரைத் தான் பெற்று முயங்குதலை விரும்பி அதனால் நம்மனையகத்து வருகின்றானலன்; ஒருகால் அவன் வரினும் அப் பொழுது மாமை நிறத்தையுடையளாய தலைவி அவனது நலத்தையுடைய பெருந்தகைமையை விரும்பித் தான் அதன் முன் ஏறட்டுக் கொண்டுடைய துனிவிட் டொழிவாளுமல்லள்; ஆகலின் அன்னிகுடியிலிருந்த அன்னி என்பவனும்; தேரழுந்தூரிலுள்ள பெரிய திதியன் என்பவனும் ஆகிய; சிறப்புற்ற இரண்டு பெரிய அரசர்கள் போர்செய்த குறுக்கையின்கணுள்ள போர்க்களத்தில்; அன்னி வெட்டிச் சாய்த்தலாலே பூவும் மலரும் மிக்க துன்புற்ற புன்னை மரம் விழுதலும் அவ்விருவருடைய பகைமையும் முடிந்தொழிந்தாற்போல; இத் தலைவனும் தலைவியுமாகிய இருவருடைய பகைமையும்; இடையிலுள்ள யான் இறந்துபோனால் என்னொருத்தியொடு நீங்கும் போலும்;
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 178 | 179 | 180 | 181 | 182 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாரை, என்பவனும், பெரிய, பகைமையும், அன்னி, தான், உரைத்தலின், புன்னை, கழனி