நற்றிணை - 145. நெய்தல்
இருங் கழி பொருத ஈர வெண் மணல் மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு |
5 |
புணர்ந்தனன் போல உணரக் கூறி, 'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை; யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம் பராரைப் புன்னைச் சேரி, மெல்ல, நள்ளென் கங்குலும், வருமரோ- |
10 |
அம்ம வாழி!- தோழி அவர் தேர் மணிக் குரலே! |
தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக்கேள்!; கரிய கழியின் கண்ணுள்ள நீர் அலையினால் மோதுதலானே ஈரமாகிய வெளிய மணலிலே படர்ந்த வலிய கொடி அடும்பின் பெரிய இதழையுடைய மலர்; மகளிரின் கூந்தலிலிடுகின்ற மாலைக்குக் கூட்டாநிற்கும்; கண்டோர் விரும்புந் தன்மையுடைய கடல் நாடனாகிய நங்காதலனுடைய; அச்சந்தரும் வெய்ய நட்பானது; பண்டு பொருந்தியிருந்து இப்பொழுது யாதொரு தொடர்பும் நம்பால் இல்லாதிருந்தும்; நம் அறன் இல்லாத அன்னையானவள்; நம்மொடு அவன் புணர்ந்தனன் போல வெளிப்படையாகச் சொல்லி; அவன் தான் இப்பொழுது யாங்குளன் என்று கூறாநிற்கும்; அன்றி நீயும் நின் எழுச்சி முதலியன என்னால் அறிதற்கும் உரியள்; நம்முடைய பருத்த அடியையுடைய புன்னை மரங்களையுடைய சேரியின்கண்; இரவில் நடுயாமத்திடையிருளிலும் அவர் தேரிலுள்ள மணியினோசை மெல்லவந்தொலியாநிற்கும்; இதற்கு யான் யாது செய்ய வல்லேன்? யாதாகி முடியுமோ;
இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது. - நம்பி குட்டுவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 143 | 144 | 145 | 146 | 147 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யான், தோழி, நீயும், அவர், இப்பொழுது, அவன், உரியள், கொடி, நம்மொடு, புணர்ந்தனன், தான், அறன், அடும்பின்