நற்றிணை - 126. பாலை
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி, துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் |
5 |
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம், இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின், இளமையின் சிறந்த வளமையும் இல்லை; இளமை கழிந்த பின்றை, வளமை காமம் தருதலும் இன்றே; அதனால், |
10 |
நில்லாப் பொருட் பிணிச் சேறி; வல்லே- நெஞ்சம்!- வாய்க்க நின் வினையே! |
நெஞ்சே! நல்ல மேலிடமெல்லாம் பசுங்காய் நிறமாறிச் செங்காயாகிப் பின்னர்க் கருங்களியாய் உதிர்கின்ற கனியையுடைய ஈத்த மரங்கள் மிக்க; வெளிய புறத்தினையுடைய களர்நிலத்திலே பட்ட புழுதிபடிந்த கடிய நடையையுடைய களிற்றியானை; நெறியிலே செல்லுபவரைக் கண்டு கொல்லுவதற்கு விரும்பி விடியற்காலத்தில் சுரத்தின் கண்ணே குறுக்கிட்டுச் சென்று ஆங்கு விரைவில் வரும் அயலார் யாரையும் காணாது; தான் கொண்டிருந்த அச் சினத்தைப் பனைமரத்தின் மோதி அப்பால் அடங்குகின்ற பாழ்த்த நாட்டினையுடைய பாலை நிலத்திலே; சென்று ஈட்டப்படும் பொருளும் ஓரின்பத்தைத் தருமெனில், இளமையின் சிறந்த வளமையும் இல்லை அதுதானும் இளமையில் நுகரும் காமவின்பத்தினுங்காட்டிற் சிறந்த இன்பமாமோ? இல்லையே! அங்ஙனமாக அத்தகைய வின்பத்தைத் தரும் வளமை சிறந்ததாகுமோ? இல்லையன்றோ! இளமை கழிந்தபின்றை வளமை காமந்தருதலும் இன்றே அத்தகைய காமவின்பந்தான் இளமையிலேயே துய்க்கலாவதன்றி முதுமையின் கண்ணே துய்க்கப்படுவ தொன்றாகுமோ? இல்லையே! இளமைப் பருவத்தைப் பொருளீட்டுதலிலே கழித்துவிட்டாலோ அப் பொருள்வளம் முதுமையின்கண்ணே காமவின்பத்தைத் தருதற்கும் இயையுமோ? இல்லையே; ஆதலின் இவற்றை ஒருசேர ஆராய்ந்து நிலைநில்லாப் பொருளாசை நின்னைப் பிணித்தலாலே இக் காமவின்பத்தினைக் கைவிட்டு விரையச் செல்கின்றனை ஆயிற்சென்றுகாண்! நின் செயல் நினக்கு வாய்ப்புடைத்தாவதாக!;
பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 124 | 125 | 126 | 127 | 128 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வளமை, சிறந்த, இல்லையே, நின், இன்றே, சென்று, அத்தகைய, கண்ணே, இல்லை, பொருளும், காணாது, தரும், இளமையின், பாலை, வளமையும், இளமை