கலித்தொகை - குறிஞ்சிக் கலி 47
ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம் புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்; வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல், நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்; இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க | 5 |
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்; அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச் சொல்லும் சொல், கேட்டீ சுடரிழாய்! பல் மாணும்; 'நின் இன்றி அமையலேன் யான்' என்னும் அவன் ஆயின், அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதுஆயின், | 10 |
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்! 'அறியாய் நீ; வருந்துவல் யான்' என்னும் அவன் ஆயின், தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதுஆயின், அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்; 'வாழலேன், யான்' என்னும் 'நீ நீப்பின்' அவன் ஆயின், | 15 |
'ஏழையர்' எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின், சூழுங் கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்; சூழுங்கால், நறுநுதால்! நம்முளே சூழ்குவம் 'அவனை, நாண் அட, பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது; | 20 |
"பேணினர்" எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன் வௌவினன் முயங்கும் மாத்திரம் வா' எனக் கூறுவென் போலக் காட்டி, மற்று அவன் மேஎவழி மேவாய், நெஞ்சே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அவன், ஆயின், ஒன்று, சொல், என்னும், யான்&, உடையன், ஆங்கு, நறுநுதால், வருந்துவல், அரிதுஆயின், போல், போல்வது, சொல்லும், அன்னான்