கலித்தொகை - நெய்தற் கலி 131
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என் திருந்திழை மென் தோள் மணந்தவன் செய்த அருந் துயர் நீக்குவேன் போல்மன் பொருந்துபு பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண், நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி | 5 |
இன மீன் இகல் மாற வென்ற சின மீன் எறி சுறா வான் மருப்புக் கோத்து, நெறி செய்த நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து, கை உளர்வின் யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப, தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை | 10 |
வீழ் ஊசல் தூங்கப் பெறின்; மாழை மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல் கடைஇ யான் இகுப்ப, நீள் தூங்காய், தட மென் தோள் நீத்தான் திறங்கள் பகர்ந்து நாணினகொல், தோழி? நாணினகொல், தோழி? | 15 |
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல், ஆனாப் பரிய அலவன் அளைபுகூஉம் கானல், கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப, தோழி! என் மேனி சிதைத்தான் துறை; | 20 |
மாரி வீழ் இருங் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண், தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்! தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை; பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி! | 25 |
இரவு எலாம், நல் தோழி! பார்த்து உற்றன என்பவை 'தன் துணை இல்லாள் வருந்தினாள்கொல்?' என, இன் துணை அன்றில் இரவின் அகவாவே அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என் மென் தோள் ஞெகிழ்த்தான் துறை; | 30 |
கரை கவர் கொடுங் கழி, கண் கவர் புள்ளினம் திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை, இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும் அசை வரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை; அருளினகொல், தோழி? அருளினகொல், தோழி? | 35 |
இரவு எலாம், தோழி! அருளின என்பவை கணம் கொள் இடு மணல் காவி வருந்த, பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வணங்கி உணர்ப்பான் துறை; | 40 |
என, நாம் பாட, மறை நின்று கேட்டனன், நீடிய வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை யான் என உணர்ந்து, நீ நனி மருள, தேன் இமிர் புன்னை பொருந்தி, | 45 |
தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 129 | 130 | 131 | 132 | 133 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, ஊசல், பார்த்து, இரவு, என்பவை, துறை, மென், எலாம், உற்றன, தோள், மீன், பாடித்தை, ஒன்று, சீர், அருளினகொல், திரை, துணை, தான், கவர், பாடும், ஏய்க்கும், உண்கண், எழில், கொண்ட, செய்த, வீழ், யான், கமழ், வயங்கு, நாணினகொல், நாம்