முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 49. தேர் வியங்கொண்ட பத்து
ஐங்குறுநூறு - 49. தேர் வியங்கொண்ட பத்து
போர் வினை முடிந்த பின்னர் தேரில் இல்லம் மீளும் தலைவன் தன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.
சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் சேயிழை மாதரை உள்ளி நோய்விட முள் இட்டு ஊர்மதி வலவநின் புன்இயல் கலிமாப் பூண்ட தேரே. | 481 |
வலவ, மூங்கில் போல் சாயல் கொண்ட தோளும் அழகிய வரிகொண்ட அல்குலும் உடைய உன் மனைவியை நினை. அவளுக்கும் உனக்கும் இருக்கும் காம நோய் தீரவேண்டும். பறவை போல் பறக்கும் உன் குதிரைகளைத் தாற்றுக் கோலைப் பயன்படுத்தி விரைந்து ஓட்டுக.
தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாக வல்விரைத்து கடவுமதி பாகவெள்வேல் வென்றடு தானை வேந்தனொடு நாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே. | 482 |
தெரிந்தெடுத்த அணிகலன்களைப் பூண்டவள் உன் மனைவி அரிவை. அவளுக்கு நீ இன்ப விருந்து தரவேண்டும். அதனால், மிகவும் விரைந்து தேரை ஓட்டுக. பாக, வெற்றி வேல் வேந்தன் வரும் வரையில் காத்திருந்தால் அது ஊழிக்காலம் போல நெடிது காலம் ஆகும்.
ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே முன்னுறக் கடவுமதி பாக நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே. | 483 |
ஆறு அழகுடன் திகழும்படி மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. வேந்தன் போர்த்தொழிலை முடித்துக்கொண்டான். குதிரைகள் விரைந்து பாய்கின்றன. நீ நம் தேரை அவற்றிற்கு முன் செல்லும்படி ஓட்டுக. பாக, நல்ல நெற்றி கொண்ட உன் அரிவை மனைவி நலம் பெறவேண்டும் அல்லவா?
வேனில் நீங்கக் கார்மழை தலைஇக் காடுகவின் கொண்டன்று பொழுது பாடுசிறந்து கடியக் கடவுமதி பாக நெடிய நீடினம் நேரிழை மறந்தே. | 484 |
வேனில் காலம் கடந்துவிட்டது. கார் காலம் வந்து மழை பொழிகிறது. காடு அழகுடன் திகழ்கிறது. பாக, பெருமிதம் சிறக்க விரைந்து தேரை ஓட்டுக. மனைவியை மறந்து நீண்ட காலம் தங்கிவிட்டோம்.
அரும்படர் அவலம் அவளும் தீரப் பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க ஏமதி வலவ தேரே மாருண்டு உகளும் மலரணிப் புறவே. | 485 |
அவள் நினைவுத் துன்பம் தீரவேண்டும். அவள் பருத்த தோள்களைத் தழுவவேண்டும். வலவ, தேரை ஓட்டுக.. பூத்துக் கிடக்கும் முல்லை நிலத்தில் விலங்கினங்கள் மருண்டு ஓடும்படி ஓட்டுக.
பெரும்புன் மாலை ஆனது நினைஇ அரும்படர் உழைத்தல் யாவது என்றும் புல்லி ஆற்றாப் புரையோள் காண வன்புதெரிந்து ஊர்மதி வலவநின் புள்ளியல் கலைமாப் பூண்டதேரே. | 486 |
பெரிதும் அற்பமான மாலைப் பொழுது இது. இதனைத் தாங்க முடியாத வருத்தத்துடன் பிரிந்திருக்கும் நம்மை நினைத்துக்கொண்டிருப்பாள் உன் மனைவியும், என் மனைவியும். அந்தத் துன்பத்தைப் போக்குவது எப்படி? தழுவி ஆறுதல் பெறாத அந்த மேம்பட்ட பண்புடையவளைக் காண, சாட்டையால் அடித்து ஓட்டு. தேரில் பூட்டிய குதிரைகள் பறவைகளைப் போலப் பறக்கட்டும்.
இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே செறிதொடி உள்ளம் உவப்ப மதியுடை வலவ ஏமதி தேரே. | 487 |
பிரிந்தவர் நினைக்கும் மாலைப் பொழுது இது. நெருங்கிய வளையல்களை அணிந்தவள் மகிழும்படி அறிவுக் கூர்மை உடைய வலவ.. தேரை விரைந்து ஓட்டுக.
கருவி வானம் பெயல் தொடங்கின்றே பெருவிறல் காதலி கருதும் பொழுதே விரிஉளை நன்மாப் பூட்டிப் பருவரல் தீரக் கடவுமதி தேரெ. | 488 |
மேகம் திரண்டு வானம் மழை பொழியத் தொடங்கியுள்ளது. பெருமை மிக்க காதலி காதலனை நினைக்கும் காலம் இது. விரிந்த பிடரி மயிர் கொண்டதும் துள்ளிப் பாய்வதுமான நல்ல குதிரையைப் பூட்டி, நம் ஆசைத் துன்பம் தீர, தேரை ஓட்டுக.
அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப மெண்புல முல்லை மலரும்மாலைப் பையுள் நெஞ்சின் தையல் உவப்ப நுண்புரி வண்கயிறு இயக்கிநின் வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. | 489 |
அரி என்னும் வண்டினம் அழகிய சிறகுகளை உடையது. அவை மொய்க்கும்படியாக முல்லைப் பூக்கள் மலரும் மாலை வேளை இது. துன்பத்தில் வருந்தும் பெண்ணின் நெஞ்சம் மகிழ வேண்டும். நுண்ணிய புரி முறுக்குக் கொண்ட கடிவாளக் கயிற்றைச் சுண்டி வளம் மிக்க குதிரையை ஓட்டு. தேர் விரைந்து செல்லட்டும்.
அம்தீம் கிளவி தான்தர எம்வயின் வந்தன்று மாதோ காரே ஆவயின் ஆய்த்தொடி அரும்படர் தீர ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. | 490 |
அவள் கொஞ்சும் மொழி என் நினைவுக்கு வருகிறது. மணி கட்டிய தேரை விரைந்து செலுத்துக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கடவுமதி, தேரே, அரும்படர், நெடுந்தேர், விரைந்தே, உவப்ப, பொழுதே, ஊர்மதி, ஏமதி, வலவநின்