முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
ஐங்குறுநூறு - 42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
வீட்டுக்கு உரிய தலைவன் பருவ காலத்தைப் பாராட்டி காலத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுதல்.
#2950;ர்குரல் எழிலி அழிதுளி சிதறிக் கார்தொடங் கின்றால் காமர் புறவே வீழ்தரு புதுப்புனல் ஆடுகம் தாழிருங் கூந்தல் வம்மடி விரைந்தே. | 411 |
ஆரவார இடிக்குரல் எழுப்பும் மேகம் மழை பொழிந்து கார்காலம் நம் முல்லை நிலத்தில் தொடங்கிவிட்டது. முல்லை நிலம் காட்சிக்கு இனிதாக விளங்குகிறது. கொட்டும் அருவியில் நீராடலாம். நீண்டு தாழ்ந்த கூந்தல் அழகியே வருக.
காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப் பூவணி கொண்டன்றால் புறவே பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே. | 412 |
காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவு முதலான பூக்கள் மலர்ந்து முல்லைநிலம் அழகாகத் திகழ்க்கிறது. இவற்றையெல்லாம் பெரிதும் விரும்பும் கண்ணினை உடையவளே விளையாடுவோம் விரைந்து வருக.
நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின் நின்னே போல மஞ்ஞை யாலக் கார்தொடங் கின்றால் பொழுதே பேரியல் அரிவை நாநயத்தகவே. | 413 |
உன் நெற்றியைப் போல முல்லை நிலம் மணக்கிறது. உன்னைப் போல மயில் ஆடுகிறது. கார்காலம் தொடங்கிவிட்டது. அரிவைப் பருவம் கனிந்தவளே நாம் விரும்பி நுகர்வோம் வருக.
புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக் கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி மெல்லியல் அரிவை கண்டிகு மல்லல் ஆகிய மணங் கமழ் புறவே. | 414 |
பறவைகளும் விலங்குகளும் இனிதே கூடித் துள்ளி விளைநாடித் திளைக்கின்றன. கிளைகளிலும், கொடிகளிலும் பூக்கள் பல்கிக் கிடக்கின்றன. மெல்லிய இயல்பினை உடைய அரிவைப் பருவத்தவளே இவற்றையெல்லாம் கண்டு களிக்கலாம் மணம் கமழும் முல்லை நில அழகினைக் காண வருக.
இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே உதுவே மடந்தைநாம் உள்ளிய புறவே இனிதுடன் கழிக்கின் இளமை இனிதால் அம்ம இனிஅவர்ப் புணர்வே. | 415 |
மடந்தையே இதுதான் நாம் விரும்பிய பருவ காலம். அதுதான் நாம் நினைத்த முல்லை நிலம் இருவரும் சேர்ந்து இதனைப் பயன்படுத்திக்கொண்டால் நம் இளமை இனிதாகும் இனியவர் சேர்ந்திருப்பதுதான் இன்பம்.
போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து களிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின் மடப்பிடி தழீஇய மாவே சுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே. | 416 |
முல்லை நிலத்தில் மொட்டு விரிந்து பூந்துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன தேனை உண்டு வண்டுகள் பாடுகின்றன கண்ணுக்ககினிய புதர்கள் தன் பெண்ணோடு உறவு கொள்ளும் ஆண்யானையைப் பார் சுடரும் அணிகலன் அணிந்தவள்ளே நாமும் யானையைப் போல இருக்கலாமே.
கார்கலந் தன்றால் புறவே பலவுடன் நேர்பரந் தனவால் புனமே ஏர்கலந்து தாதார் பிரசம் மொய்ப்பப் போதார் கூந்தல் முயங்கினள் எம்மே. | 417 |
முல்லை நிலத்தில் கார் காலம் வந்துவிட்டது. காடே கவின் பெற்றுள்ளது பிரசம் என்னும் தேனீக்கள் தேனை உண்கின்றன பூ அணிந்த கூந்தலை உடையவள் என்னை அணைத்துக்கொண்டாள்.
வானம் பாடி வறங்களைந்து ஆனாது அழிதுளி தலைஇய புறவின் காண்வர வானர மகளா நீயே மாண்முலை அடைய முயங்கி யோயே. | 418 |
இந்தத முல்லை நிலத்தில் மழைத்துளிகள் விழுகின்றன வானம்பாடிப் பறவைகள் அவற்றை உண்டு மகிழ்கின்றன நீ என்ன வானர மகளா? அழகிய முலை அமுங்க அணைக்கிறாயே.
உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப் பிரிந்துறல் அறியா விருந்து கவவி நம்போல் நயவரப் புணர்ந்தன கண்டிகு மடவரல் புறவின் மாவே. | 419 |
நம் உயிரும் உயிரும் கலந்து ஒன்றாகிக் கிடக்கின்றன குற்றமற்ற நட்பு இது இந்த நட்பிற்குப் பிரியத் தெரியாது விருந்து போல ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன இப்படி நாம் புணர்ந்திருப்பது போல பெண்ணே அங்கே பார் முல்லை நில விலங்குகளும் புணர்ந்து வாழ்கின்றன.
பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத் தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு நன்னலம் எய்தினை புறவே நின்னைக் காணிய வருதும் யாமே வாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே. | 420 |
கொன்றை பொன்னைப் போல மலர்ந்திருக்கிறது காயா மணி போல் மலர்ந்திருக்கிறது தோன்றி மலரும் பூத்திருக்கிறது முல்லை நிலமே நல்ல நலம் பெற்றுத் திகழ்கிறது அதனால் நான் உன்னைக் காண வந்ததுள்ளேன் ஒளிரும் முகம் கொண்ட அரிவையே உன் அழகெல்லாம் எனக்கு வேண்டும் அதை நினைத்துக்கொண்டுதான் வந்துள்ளேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புறவே, புறவின், கண்டிகு, அரிவை, பொழுதே, மடந்தைநாம், போதார், மடவரல், மாவே, யாமே, கொன்றை, காமர், கின்றால், கார்தொடங், ஆடுகம், கூந்தல், அழிதுளி, காயா, விரைந்தே, கவினிப்