முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 38. மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து.
ஐங்குறுநூறு - 38. மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து.
தன் மகள் காதலனுடன் சென்றுவிட்டதை எண்ணிக் கலங்கும் செவிலியும், பெற்ற தாயும்.
மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும் உயர்நெடும் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி இனிய வாகுக தில்ல அறநெறி இதுவெனத் தெளிந்தஎன் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே. | 371 |
மள்ளர்கள் முழவு முழக்கும் இசைக்கு ஏற்றாற்போல மயில் ஆடும் ஓங்கி உயர்ந்த குன்றத்தில் என் மகள் செல்லும் குன்றத்தில் மழை பொழிந்து வழி இனிமையாக அமையட்டும். பிறை போன்ற நெற்றியை உடையவள் என் மகள். “அறநெறி இதுதான்” என்னும் தெளிவு பெற்று அவள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள். அவள் செல்லும் வழி இனியாக அமையட்டும்.-- செவிலி சொல்கிறாள்.
என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு அழுங்கல் மூதூர் அலரெழச் செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே. | 372 |
என்னை நினைத்தாளோ இல்லையோ என்மகளை நெஞ்சம் கொள்ளுமாறு அவன் உறுதிமொழி கூறித் தேற்றியிருக்குறான்ழ அந்தக் காளையோடு அவள் சென்றுவிட்டாள். ஆரவாரம் மிக்க இந்த ஊர் அலர் தூற்றுகிறது. என் மகளோ செழுமையான பல குன்றங்களைக் கடந்து சென்றுவிட்டாள்.-- செவிலி கலங்குகிறாள்.
நினைத்தொறும் கலிலும் இடும்பை எய்துக புலிக்கோட் பிழைட்த கவைக்கோட்டு முதுகலை மான்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும் வெஞ்சுரம் என்மகள் உய்த்த வம்பமை வல்வில்விடலை தாயே. | 373 |
இரட்டைக் கொம்பு கொண்ட ஆண்மான். புலி தாக்குதலிலிருந்து பிழைத்துக்கொண்டது. பெண்மானை அணைக்க விரும்பி தன் ஆண் குரலை எழுப்பியது. அத்தகைய கொடுமையான காட்டில் என் மகளை அழைத்துக்கொண்டு சென்றான் அந்தக் காளை. அவன் தாய் தன் மகனை நினைக்கும்போதெல்லாம் நான் என் மகளை நினைத்து அழுவது போல அழட்டும்.-- செவிலி புலம்புகிறாள்.
பல்லூல் நினைப்பினும் நல்லென் றூழ மிளி முன்பின் காளை காப்ப முடியகம் புகாக் கூந்தலள் கடுவனும் அறியாக் காடுஇறந் தோளே. | 374 |
பல முறை நினைத்தாலும் நல்ல ஊழ் அமையட்டும் என்று நினைப்பேனாக. என் மகளை அழைத்துச் சென்ற வீரம் மிக்க வல்லாளனாகிய அந்ததக் காளை என் மகளைக் காப்பாற்றட்டும். உள்ளுக்குள் சிக்கு முடிச்சு இல்லாத கூந்தலை உடையவள் என் மகள். ஆண் குரங்களும் அறியாத காட்டு வழிய்யில் சென்றுவிட்டாளே.-- செவிலி வாழ்த்துகிறாள்.
இதுவென் பாவை பாவை இதுஎன் அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல் பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவை காண்தொறும் காண்தொறும் கலங்க நீங்கின ளோஎன் பூங்க ணோளே. | 375 |
அவள் என் கண்ணணில் மலர்ந்துகொண்டிருக்கிறாள். என் கையிலிருக்கும் இந்தப் பொம்மை என் மகளாகிய பாவைக்கு விருப்பமான பொம்மை. இந்தப் பச்சைக்கிளி என் பச்சைக்கிளியாகிய மகள் எடுத்து விளையாடிய பச்சைக்கிளி. இந்த மைனாக் குருவி என் மகளுக்கு இனிய சொல் கூறும் மைனாக் குருவி. என்று சொல்லிக்கொண்டு என் மனம் சுழல்கின்றது. என் மகள் நலம் மிக்க சுடர் முகம் கொண்டவள். இவற்றைக் காணும்போதெல்லாம் கலங்ககுகிறேன். இப்படிக் கலங்கும்படி விட்டுவிட்டு என் மகள் நீங்கிவிட்டாளா?
நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று காடுபடு தீயின் கனலியர் மாதோ நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை உண்கண் மடவரல் போக்கிய புணர்த்த அறனில் பாலே. | 376 |
இப்படி நாள்தோறும் நான் புலம்புகிறேன். இப்படிக் கலங்கும்படி என் மகளை என்னிடமிருந்து பிரித்த விதி புலம்பித் தொலைக்கட்டும். நாற்புறமும் காடு பற்றி எரியும்போது இடையில் அகப்பட்டுக்கொண்டவர் கலங்குவது போல விதி கலங்கட்டும். நல்வினை மட்டுமே செய்தது இந்த மாளிகை. இந்த மாளிகையில் உள்ளவர்கள் கலங்குகின்றனர். நல்வினை செய்தவர் கலங்கும்படி மகளைப் போக்கிய விதி கலங்கட்டும்.-- செவிலியின் வருத்தம்.
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் சென்றனள் மன்றஎன் மகளே பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே. | 377 |
தண்ணீர்த் தாகத்தால் வாடும் யானை இசைக்கருவி கொம்பு ஊதுவது போலப் பெருமூச்சு விடும். அப்படிப்பட்ட வழியில் என் மகள் சென்னுவிட்டாள். அவள் விளையாடும் பந்து, பாவை, கழங்கு ஆகியவற்றை என்னிடம் அவள் நினைவாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். செவிலியின் புலம்பல்.
செல்லிய முயலிப் பாஅய சிறகர் வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப் போகிய அவட்கோ நோவேன் தேமொழித் துணையிலள் கலிழும் நெஞ்சின் இணையேர் உண்கண் இவட்குநோ வதுமே. | 378 |
மேகம் போல விரியும் சிறகினை உடைய வௌவால் மாலை நேரத்தில் பறந்து செல்ல விரும்பும். இந்த மாலை வேளையில் நான் புலம்புகிறேன். நான் புலம்பும்படி போய்விட்ட அவளுக்காக நான் நோவேனா? அல்லது அவள் இல்லாமல் அழுகிறாளே அவள் தோழி இவளுக்காக நான் நோவேனா?-- செவிலியின் கலக்கம்.
தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின் இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை இனக்களிறு வழங்கும் சோலை வயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே. | 379 |
என் மகள் முன்பே சொல்லியிருந்தால் தான் விரும்பும் சுற்றத்தாருடன் நாமே திருமணம் செய்து தந்திருக்கலாம். இது இனியது அல்லவா? அவ்வாறன்றி அவள் தான் விரும்பும் காதலனுடன் சென்றுவிட்டாள். பனி மலையில் யானைக் கூட்டம் நடமாடும் சோலையில் வெற்றிவேல் முருகனைப் போன்றவனுடன் சேர்ந்து சென்றுவிட்டாளே.-- பெற்ற தாய் புலம்புகிறாள்.
அத்தம் நீளிடை அவனொடு போகிய முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல் தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றஅவள் ஆயத் தோரே. | 380 |
என் மகள் காட்டு வழியில் அவனோடு போய்விட்டாள். முத்துப் போன்று அரும்பும் புன்முறுவலைக் காட்டிக்கொண்டு அவனோடு சென்றுவிட்டாள். நான் அவளுக்குத் தாய் என்னும் பெயரைத் தாங்கிக் கொண்டுள்ளேன். இது ஒன்றுதான் எனக்குக் கிடைத்த வலிமை. அவளை மணந்துகொண்டவரின் உற்றார் உறவினர்கள் கொடுத்துவைத்தவர்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போகிய, கலிழும், காண்தொறும், உண்கண், மடவரல், அத்தம், பைங்கிளி, பாவை, குன்றம், என்னும், கொல்லோ, மகளே, போக்கிய