முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 33. இடைச்சுரப் பத்து.
ஐங்குறுநூறு - 33. இடைச்சுரப் பத்து.
பொருள் தேடச் செல்லும் தலைவன் தன் காதலியின் மாண்பினை இடைவழியில் நினைக்கிறான்.
உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை அலறுதலை ஓமை அம்கவட் டேறிப் புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்து மொழிபெயர் பன்மலை இறப்பினும் ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே. | 321 |
பிரிந்து செல்லும் தலைவன் நடுவழியில் தலைவியின் குணத்தை எண்ணிப் போற்றுகிறான்... தலைமயிர் விரிந்திருக்கும் பருந்து. உளி போன்ற வாயினை உடையது அதன் பேடை. விரிந்த தலையை உடைய ஓமை மரக் கிளையில் இருந்துகொண்டு தன் ஆண் பருந்தை அழைத்துப் புலம்பும். நிலம் காய்ந்து கிடக்கும். வேற்றுமொழி பேசும் நாட்டிலுள்ள மலை. இந்த வழியில் செல்லும்போதும் என் காதலியின் குணம் என் நினைவைத் துளைக்கிறதே.
நெடுங்கழை முனிய வேனில் நீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயினை முன்னே இனியே ஒண்ணுதல் அரிவையை யுள்ளுதொறும் தண்ணிய வாயின சுரட்திடை யாறே. | 322 |
செல்லும் வழியில் தலைவன் நினைக்கிறான்... உயர்ந்த மூங்கில் காயும்படியான கோடைக்காலம். கல் வெடிக்கும்படி வெயில் காய்கிறது. இப்படிப்பட்ட வெயில். இந்த வெயிலிலும் என் உள்ளம் என் ஒளிமுக அரிவையைப் பற்றிய நினைவு வருகிறதே. அதனால் காடே குளு குளு எனத் தோன்றுகிறதே.
வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக் கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும் வெஞ்சுரக் கவலை நீந்தி வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே. | 323 |
தலைவன் எண்ணம் படர்கிறது... வளைந்த பல்லை உடையது செந்நாய். அதன் பெண்-நாய் கருவுற்றிருக்கும் நிலையில் வயா ஆசையால் வருந்துகிறது. அதற்காக ஆண்-நாய் கள்ளிக் காட்டு வழியில் காட்டுப் பன்றியைத் தேடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடிய பாலைநிலக் காட்டு வழியில் சென்றுகொண்டிருக்கிறேன். இப்போதும் என்னவளின் நற்குணம் என் நினைவுக்கு வருகிறது.
எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச் சிறிதுகண் படுப்பினும் காண்குவென் மன்ற நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கின் தம்பாய் கூந்தல் மாஅ யோளே. | 324 |
மீண்ட தலைவன் தோழியிடம் சொல்கிறான்... கோடைக் காலத்தில் தீ பற்றி எரிந்த காட்டு வழியில் சிறிது நேரம் கண் உறங்கினாலும் நள்ளிரவில் குளுமையான வளமனையில் என்னவளோடு நான் இருப்பது போன்ற நினைவுதான் வந்தது. வேங்கைப் பூ கொடிக் கிடப்பது போன்ற சுணங்கினை உடைய மேனியள் தேன் பாயும் கூந்தலை உடையவள் மாமை நிறம் கொண்டவள் இவள் நினைவுதான்.
வேணில் அரையத்து இலையொலி வெரீஇப் போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும் வெம்பலை அருஞ்சுரம் நலியாது எம்வெம் காதலி பண்புதுணைப் பெற்றே. | 325 |
மீண்டவன் தோழியிடம் சொல்கிறான்... வேனில் காலம் அரை மரத்தின் இலைகள் ஒலிக்கும் அந்த ஒலியைக் கேட்டுப் பயந்து போகில் என்னும் பறவை உணவு உண்ணாமல் வேறு இடத்துக்குச் செல்லும். வெயிலின் வெப்ப அலை வீசும் வழி இப்படிப்பட்ட வழியில் நான் சென்றாலும் விருப்பம் மிக்க என் காதலியின் துணை இருந்ததே எனக்கென்ன குறை?
அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாது மடமான் அமபினை மறியொடு திரங்க நீர்மருங்கு அறுத்த நிரம்பா இயவின் இன்னா மன்ற சுரமே இனிய மறையான் ஒழிந்தோள் பண்பே. | 326 |
வழியில் வெயிலின் கொடுமையை நினைத்துத் தலைவன் சொல்கிறான்... தீ பறக்கும் நிலப் பரப்பு நிழலே இல்லாத நிலப் பரப்பு ஆண்மானும் பெண்மானும் குட்டியோடு வாடும் இடம் தண்ணீரே இல்லாத வழி இது கொடுமையான பாலைநில வழி இங்கு நினைவுக்கு வருகிறது நான் விட்டுவிட்டு வந்தேனே அவள் பண்பு இனிமையானது.
பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச் சிறுகண் யானை நிலந்தொடல் செல்வா வெயின்முளி சோலைய வேய்உயர் சுரனே அன்ன ஆர்இடை யானும் தண்மை செய்தஇத் தகையோன் பண்பே. | 327 |
வழியில் தலைவன் தலைவியை நினைக்கிறான்... வரி வரியான கோடுகளை உடையது யானையின் வலிமை மிக்க கை நிலத்தைத் தொட்டால் வெந்துவிடும் என்று அஞ்சி யானை நிலத்தைத் தொடுவதில்லை இப்படிப்பட்ட வெயில் காயும் உலர்ந்து கிடக்கும் சோலை அது மூங்கில் உயர்ந்திருக்கும் அந்த வழி இப்படிப்பட்ட வழி அது ஆனாலும் என் தகைமையோள் குணம் என்னைக் குளுமை பெறச் செய்த்து.
நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த் தண்ணிய வாயினும் வெய்ய மன்ற மடவரல் இந்துணை ஒழியக் கடமுதிர் சோலைய காடிறத் தேற்கே. | 328 |
தலைவன் தன் தோழனிடம் சொல்கிறான்... தூறல் மழை நுண்ணிதாகப் பொழிகிறது மணம் மிக்க பூக்கள் மலர்ந்து வழி குளுமையாக இருக்கிறது. என்றாலும் அவள் இல்லாமல் தனியே காட்டு வழியில் செல்வது எனக்குக் கொடுமையாக இருக்கிறது.
ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை வெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடு மறுதரு வதுகொல் தானே செறிதொடி கழிந்துகு நிலைய வாக ஒழிந்தோள் கொண்டஎன் உரங்கெழு நெஞ்சே. | 329 |
தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்... ஆள் நடமாட்டம் இல்லாமல் பாழ்பட்டுக் கிடக்கும் நிலப்பரப்பு வழிப்பறி செய்வோர் தாக்கும் பாலைநில வழி இதில் சென்றுகொண்டிருக்கிறோம் நெஞ்சே நெறிஇந்த வளையல் கழன்று விழும் கையை உடையவளாக இருக்கும் அவளை நினைத்து நீ திரும்பிவிடுகிறாயே நான் என்ன செய்வேன்?
வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்தி வந்தனம் ஆயினும் ஒழிகஇனிச் செலவே அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக் கதிர்தெறு வஞ்சுரம் நினைக்கும் அவிர்கொல் ஆய்தொடி உள்ளத்துப் படரே. | 330 |
தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்... மண்ணைத் துகளாக்கிக்கொண்டிருக்கும் வெயில் இப்படி வெயில் தாக்கும் காடு நெஞ்சே இந்தக் காட்டில் வந்துகொண்டிருக்கிறோம் அவள் அழுதுகொண்டிருக்கிறாள் தன் நலமெல்லாம் சிதைந்து அழுதுகொண்டிருக்கிறாள் நான் வெயில் காயும் காட்டில் செல்கிறேனே என்று நினைத்து அழுதுகொண்டிருக்கிறாள் என்ன செய்வேன்?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மன்ற, நீந்தி, பண்பே, சோலைய, ஒழிந்தோள், அருஞ்சுரம், தண்ணிய, வெய்ய