ஐங்குறுநூறு - 3. கள்வன் பத்து
களவன் என்பது நண்டு. நண்டு விளையாடுவதையும், நண்டை விளையாடும்படிச் செய்தும் வேடிக்கை பார்ப்பது இளமைப் பருவத்து வழக்கம். தலைவன் ஊர் நண்டு இப்படியெல்லாம் விளையாடும் என்று இந்தப் பத்துப் பாடல்களும் தெரிவிக்கின்றன. நண்டின் செயல் தலைவன் செய்யும் செயல் போல் உள்ளது எனக் கண்டுகொள்வது இறைச்சிப் பொருள். தலைவியின் தாயை ‘அன்னாய்’ என விளித்துத் தோழி கேட்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப் புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும் தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும் உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய் | 21 |
முள்ளி என்னும் தாமரை பூத்திருக்கும் ஊரன் ஆற்றுத் துறையில் வாழும் நண்டு ஆம்பல் பூக்களை அறுத்தெரிகிறது. ஊரன் திருமணம் செய்துகொள்வேன் என்று தெளிவுபடுத்திவிட்டான். அப்படி இருக்கும்போது அவனை நினைத்து அவனைப் பார்க்கவேண்டும் என்று பசபசக்கிறதே, ஏன்?
அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன் முள்ளி வேரளைச் செல்லும் ஊரன் நல்லசொல்லி மணந்துஇனி நீயேன் என்றது எவன்கொல் அன்னாய் | 22 |
ஊரனின் சேற்று வளையில் விளையாடும் நண்டு அங்கிருக்கும் தாமரைக் கொடிகளை அறுத்தெரிகிறதே! நல்ல சொல் பேசிய அவன் இப்பாது ‘நீ எதற்கு’ என்று இருக்கிறானே!
முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப் பூக்குற்று எய்திய புனல் அணி யூரன் தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித் தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய். | 23 |
தாமரை வேரில் இருக்கும் நண்டை நம்மோடு சேர்ந்து விளையாடச் செய்தும், பூக்களைப் பரித்துத் தந்தும் என்னைத் தழுவிக் கூடினான். இப்போது என் நெஞ்சை வருத்தும் தெய்வமாகி இருப்பது ஏன்?
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்லை தன்னும் முதலைத்து அவனூர் எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன் பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர் நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய். | 24 |
தாயைச் சாகடித்து விட்டு குட்டி நண்டுகள் பிறக்கும். முதலை தான் பெற்ற பிள்ளையைத் தானே தின்னும். மகிழ்நன் ஊர் அப்படிப்பட்டது. என் கைகள் வளையல் குலுங்க அவனைத் தழுவின. அதன் இன்ப நலத்தை நினைத்துக்கொண்டு அவன் இல்லாதபோது கழல்கின்றன. ஏன்?
அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய் வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும் கழனி யூரன் மார்புபலர்க்கு இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய். | 25 |
மழை பொழிந்து காய் காய்க்கும் செந்நிற வயலைக் கொடியை வயல் நண்டு அறுத்து விடும். இப்படிப்பட்ட வயலை உடையவன் ஊரன். அவன் மார்பு பல மகளிரின் அணிகலன்களைக் கழன்று விழச் செய்து அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தும்.
கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன் வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன் எம்மும் பிறரும் அறியான் இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய். | 26 |
வயலிலே கரந்தை வளர்ந்திருக்கும். அந்த வயலில் இருக்கும் வள்ளைக் கொடியின் மெல்லிய கால்களை நண்டு அறுத்து விடும். இப்படிப்பட்ட வயலை [சேறு] உடையவன் ஊரன். அவன் என்னையும் நினைப்பதில்லை. பிறரையும் தெரிந்துகொள்வதில்லை. இப்படி இருக்கிறானே, ஏன்?
செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன் தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்கு எவ்வளை நெகிழ சாஅய் அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய். | 27 |
வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர்களை நண்டு கொண்டு சென்று தன் மண்வளையில் பதுக்கிக்கொள்ளும். இப்படிப்பட்ட வயலை உடையவன் ஊரன். அவனுக்காக என் வளையல்கள் கழன்று துன்புறுகின்றனவே, ஏன்?
உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின் தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்கு ஒண்டொடி நெகிழச் சாஅய் மெந்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய். | 28 |
நண்டு சேற்றில் கோடு போடும் நீர் உண்ணும் துறையில் இவளுக்கு வருத்த நோய் என்றால், இவளது தோள்வளையல் கழன்று இவளது தோளில் பசபசக்கும் ஊறல் ஏன்?
மாரி கடிகொளக் காவலர் கடுக வித்திய வென்முளை கள்வன் அறுக்கும் கழனி ஊரன் மார்புற மரீஇத் திதலை அல்குல் நின்மகள் பசலை கொள்வது எவன்கொல் அன்னாய். | 29 |
மழை பொழிந்து காப்பாற்றுகிறது. வயல் காவலர்கள் நடமாட்டும் இருக்கிறது. இருந்தும் வயலில் விதைத்த நெல்முளையை நண்டு அறுத்துக்கொண்டு செல்கிறது. இப்படிப்பட்ட வயல் கொண்ட ஊரன் அவன். அவன் மார்பை உன் மகள் தழுவினாள். அதற்காக கோடுகள் இருக்கும் அல்குல் கொண்ட உன் மகள் பசப்பு ஊர வேண்டுமா?
வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன் தண்அக மண்அளை நிறைய நெல்லின் இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள் பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய். | 30 |
நண்டுக்கு வேப்பம்பூ போன்ற கண். அதன் வையில் இருப்பதோ நெற்கதிர்ப் பூக்கள். அப்படிப்பட்ட வயலை உடையவன் ஊரன். அவனுக்காக இவள் அழகை இழப்பது ஏன்?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கள்வன், அன்னாய், எவன்கொல், அறுக்கும், முள்ளி, ஊரன், புள்ளிக், தண்அக, ஊரற்கு, சாஅய், செறுவில், செல்லும், பசப்பது, யூரன், கழனி