ஐங்குறுநூறு - 27. கேழற் பத்து
காட்டுப் பன்றியைக் கேழல் என்றும், பன்றி என்றும் குறிப்பிட்டு தலைவன் செயல் அந்தப் பன்றி போல உள்ளதாக உள்ளுறைப் பொருள் வைத்து, அது வாழும் நாட்டை உடையவன் எனக் கூறும் 10 பாடல்கள் இப்பகுதியில் உள்ளன.
மெந்தினை மேய்ந்த தறுகண் பன்றி வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் எந்தை அறிதல் அஞ்சிக் கொல் அதுவே மன்ற வாரா மையே. | 261 |
தோழி தலைவியிடம் கூறுகிறாள்... மென்மையான புல் தடையில் விளையும் தினையை மேய்ந்த பன்றி மலையின் கல் அடுக்கத்தில் உறங்கும் நாடன் அவன். உன் தந்தைக்குத் தெரிந்துவிடும் என அஞ்சி வராமல் இருக்கிறான் போலும்.
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் இலங்குமலை நாடன் வரூஉம் மருந்தும் அறியும்கொல் தோழிஅவன் விருப்பே | 262 |
தோழி தல்லைவியிடம் சொல்கிறாள்... தினையை மேய்ந்த அஞ்சாத பன்றி பெரிய பாறாங்கல் அடுக்கியிருக்கும் பகுதியில் தன் துணைப் பன்றியோடு வாழும். அந்தப் பகுதிக்குத் தலைவன் உன் காதலன். அவன் விருப்பத்துக்கு மருந்து என்ன என்று அவன் அறிவானோ?.. மருந்து – திருமணம்.
நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல் கட்டளை அன்ன கேழல் மாந்தும் குன்றுகெழு நாடன் தானும் வந்தனன் வந்தன்று தோழிஎன் நலனே. | 263 |
தலைவி தோழியிடம் கூறுதல்... பொன் நிறத்தில் தினை விளைந்திருக்கும். அதனை மேயும் பன்றி பொன்னை மாற்றுப் பார்க்க உறைக்கும் கட்டளைக் கல் போலத் தோன்றும். அந்தப் பன்றி வாழும் மலை நாட்டை உடையவன் என் காதலன். அவன் இன்று வந்திருக்கிறான். அதனால் என் மேனி பொலிவுடன் திகழ்கிறது.
இளம்பிறை யன்ன கோட்ட கேழல் களங்கனி யன்ன பெண்பாற் புணரும் அயந்திகழ் சில்மப கண்டிரும் பயந்தன மாதோநீ நய்ந்தோள் கண்ணே. | 264 |
தோழி தலைவனிடம் சொல்கிறாள்... நிலாவின் இளம்பிறை போன்ற கொம்புகளை உடையது பன்றி. களாப் பழம் போன்ற நிறம் கொண்டது அதன் பெண் பன்றி. அந்த ஆண்பன்றி பெண்பன்றியைப் புணரும். இவை புணரும் நீர்க் கசிவுள்ள மலைக் காட்டின் தலைவன் நீ. உன்னை விரும்பும் இவள் கண்ணைப் பார். தீ இல்லாமல் பசந்துபோய் இருக்கிறது.
புலிகொல் பெண்பால் புவரிக் குருளை வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும் குன்றுகெழு நாடன் மறந்தனன் பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே | 265 |
பரத்தை வீட்டிலிருந்து தலைவன் அனுப்பிய தூதுவனிடம் தலைவி கூறுகிறாள்... புலியைக் கொன்ற ஆண் பன்றி சங்கு போன்ற வெண்ணிறக் கொம்புகளை உடைய தன் குட்டிகளைப் பாதுகாக்கும் குன்ற நாட்டின் தலைவன் நீ. பொன் தோன்ற புதல்வனைப் பெற்றுள்ள என்னைத் தன் புதல்வனோடு விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு குறுங்கை இரும்புலி பொரூஉம் நாடன் நனிநாண் உடைமையம் மன்ற பனிப்பயந் தனநீ நய்ந்தோள் கண்ணே. | 266 |
பிறர் திருமணமத்துக்குப் பெண் கேட்டு வந்தபோது தலைவி கண் கலங்கியதைத் தோழி தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்... சிறிய கண்ணை உடையது பன்றி. குறுகிய கையை உடையது புலி. புலியும் பன்றியும் போரிடும் நாட்டை உடையவன் நீ. நீ பெரிதும் நாணம் உடையவன். அஞ்சாமல் வந்து பெண் கேட்கவில்லை. அதனால் நீ விரும்பியவள் கண்ணீர் விட்டுக் கலங்குகிறாள்.
சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல் துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி ஐவனம் கவரும் குன்ற நாடன் வண்டுபடு கூந்தலைப் பேணிப் பண்பில சொல்லும் தேறுதல் செத்தே. | 267 |
தலைவனைப் பற்றித் தோழி தலைவியிடம் கூறுகிறாள்... பெரிதும் சினம் கொண்டது சிறிய கண்ணினை உடைய ஆண்பன்றி. அது வில்லேந்திய கானவரை ஏமாற்றிவிட்டு அவர்கள் விதைந்நிருக்கும் ஐவன நெல்லை மேயும். இப்படிப்பட்ட குன்ற நாட்டை உடையவன் உன் காதலன். அவன் உன்னை ஏமாற்றுவதற்காக ‘திருமணம் செய்துகொள்வேன்’ என்று பசப்புகிறான்.
தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு வளமலைச் சிறுதினை ய்ணீஇய கானவர் வரையோங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும் நன்மலை நாடன் பிரிதல் என்பயக்கும் மோநம் விட்டுத் துறந்தே. | 268 |
தோழி தலைவியிடம் கூறுகிறாள்... தாயை இழந்த பன்றிக் குட்டி. வரிக் கோடுகளை உடைய பன்றிக்குட்டி மலையில் வளமாக விளைந்திருக்கும் சிறுதினைக் கதிர்களை உண்ணும். கானவர் வாழும் மலை முகடுகளில் உறங்கும். இப்படிப்பட்ட மலை நாட்டின் தலைவன் உன் காதலன். உன்னைப் பிரிந்து வாழ்வதில் அவனுக்கு என்னதான் பயன் என்று தெரியவில்லை.
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை விஅளைந்த செறுவில் தோன்றும் நாடன் வாராது அவண்உறை நீடின் நேர்வளை இணை ஈர் ஓதி நீயழத் துணைநனி இழக்குவென் மடமை யானே. | 269 |
தோழி தலைவியிடம் கூறுகிறாள்... பன்றி மண்ணை உழுத நிலம். அந்தப் புழுதியில் எருவை (கழுகு) அமர்ந்து புழுப் பூச்சுகளை மேயும். இப்படிப்பட்ட நாட்டை உடையவன் உன் காதலன். அவன் வராமல் அவன் நாட்டிலேயே வாழ்வானாயின், நீ அழுவாய். நெருக்கமான கூந்தலை விரித்துக்கொண்டு அழுவாய். நானோ என் துணைத் தோழியை இழந்துவிடுவேன். மறைவிலிருந்து கேட்கும் தலைவன் மணந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து.
கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில் தலைவிளை கானவர் கொய்தனர் பொய்ரும் புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரை காணினும் கலிழுநோய் செத்துத் தாம்வந் தனர்நம் காத லோரே. | 270 |
தோழி தலைவியிடம் சொல்கிறாள்... பொருள் தேடிச் சென்ற தலைவன் திரும்பி வந்து தொலைவில் கேட்டுக்கொண்டிருக்கிறான். கிழங்கைத் தேடி பன்றி உழுத புழுதி. அந்தப் புழுதியில் விளைந்த தினை விளைச்சலைக் கானவர் கொய்துகொண்டு சென்றுவிட்டனர். அந்தக் குன்றத்துக்கு உன் காதலன் வந்திருக்கிறான். அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். அது கண்டு காம நோயில் துன்புற்று அழுவான். நாம் என்ன செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாடன், கேழல், யன்ன, குன்றுகெழு, நய்ந்தோள், கண்ணே, சிறுகண், கானவர், பெருஞ்சின, அன்ன, பன்றி, தறுகண், அடுக்கத்துத், மன்ற, துறுகல், சிறுதினை, மேய்ந்த