முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 23. அம்மவழிப் பத்து.
ஐங்குறுநூறு - 23. அம்மவழிப் பத்து.
அம்ம வாழி தோழி என்று அழைத்துக் கூறும் பாடல்கள் பத்து இதில் உள்ளன.
அம்ம வாழி தோழி கதலர் பாவை யன்னஎன் ஆய்கவின் தொலைய நன்மா மேனி பசப்பச் செல்வல் என்பதம் மலைகெழு நாடே. | 221 |
தலைவி தோழிக்கு... அம்ம வாழி, தோழி! என் காதலர் தெய்வப் பொம்மை போன்ற என் மேனி அழகு தொலைய மாமை நிறம் கொண்ட மேனி பசக்க அவர் மலை நாட்டுக்குப் “போகிறேன்” என்று சொல்கிறாரே.
அம்ம வாழி தோழி நம்மூர் நனிந்துவந்து உறையும் நறுந்தண் மார்வன் இன் இனி வாரா மாறுகொல் சின்னிரை ஓதிஎன் நுதல்பசப் பதுவே. | 222 |
தலைமகள் தோழியிடம்... அம்ம வாழி, தோழி! நம் ஊருக்கு வந்து செல்லும் மார்பன் மணக்கும் மார்பன் இதமாகத் தழுவும் மார்பன் இனி தம் ஊருக்கு வரமாட்டாரோ என்று என் நெற்றி பசக்கிறது போலும்.
அம்ம வாழி தோழி நம்மலை வரையாம் இழியக் கோடல் நீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும் தண்பனி வடந்தை அச்சிரம் முந்துவந்த் தனர்நம் காத லோரே. | 223 |
தோழி தலைமகளிடம்... அம்ம வாழி, தோழி! நம் மலையில் ஊற்று நீர் வழிகிறது. கோடல் மலர் பூத்திருக்கிறது. பிரிந்து வருந்தும் நம் துன்பம் போக்க வடக்குக் காற்று வீசிப் பனி பொழியும் அற்சிரப் பருவத்துக்கு முன்பே திரும்பி வருகிறார்.
அம்ம வாழி தோழி நம்மலை மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில் துணீநீர் அருவி நம்மோடு ஆடல் எளிய மன்ஆல் அவர்க்கினி அரிய ஆகுதல் மருண்டனென் யானே. | 224 |
தலைவி தோழியிடம்... அம்ம வாழி, தோழி! நம் மலை மணி போல் நிறம் கொண்டு விளங்கும் மாமலை. அதில் வெள்ளைத் துணி போல் நீர் ஒழுகும் அருவியில் நீராடல் அவருக்கு எளிது. இனி, அது முடியாதோ என மருள்கிறேன். தாய் இல்லத்தில் இருத்திவிட்டாள்.
அம்ம வாழி தோழி பைஞ்சுனைப் பாசடை நிவந்த பனிமலர்க் குவளை உள்ளகங் கமழும் கூந்தல் மெல்லியல் ஏர்திகழ் ஒண்ணுதல் பசத்தல் ஓரார் கொல்நம் காத லோரே. | 225 |
தோழி தலைவியிடம்... அம்ம வாழி, தோழி! இலைகள் அடைந்து பச்சை நிறத்தில் தோன்றும் சுனையில் பூத்திருக்கும் குவளை மலர் போல் கூந்தலுக்குள் மணம் வீசும் மெல்லியலே அழகொழுகும் உன் நெற்றி பசந்து போவதை அவர் சினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அம்ம வாழி தோழி நம்மலை நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தன் கொங்குஉன் வண்டின் பெயர்ந்துபுற மாறிநின் வன்புடை விறற்கவின் கொண்ட வன்பி லாளன் வந்தனன் இனியே. | 226 |
தோழி தலைவியிடம்... அம்ம வாழி,தோழி! நம் மலையில் நல்ல குளுமையான சோலையில் மணம் பரப்பிக்கொண்டு பூத்திருக்கும் காந்தள் மலரில் தேனை உண்ட பின்னர் அதனை விட்டுவிட்டு ஓடும் வண்டினைப் போல, உன் வலிமையான வீறாப்புக் கொண்ட மேனி அழகினைக் கவர்ந்துகொண்டு அன்பு இல்லாதவனாக மாறிய ‘அன்பிலாளன்’ இப்போது வந்திருக்கிறான்.
அம்ம வாழி தோழி நாளும் நன்னுதல் பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும் ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி நப்பிரிந்து உறைதோர் மன்றநீ விட்டனை யோஅவர் உற்ற சூளே. | 227 |
தோழி தலைவியிடம்... அம்ம வாழி! தோழி! நெற்றியில் பசப்பு ஊர்கிறது. நல்ல தோள் நெகிழ்ந்து மெலிகிறது. “என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை”. என் பிறர் மதிக்கும்படிக் கூறுகிறாய். காரணம் நம்மை அவர் பிரிந்து வாழ்கிறார் – என்கிறாய். அது சரி. “உன்னைப் பிரியமாட்டேன்” என்று அவர் உன்னிடம் சூள் உரைத்தாரே, அதனை மறந்துவிட்டாயா? அவர் உன்னைக் கைவிட மாட்டார்.
அம்ம வாழி தோழி நம்மூர் நிரந்திலங்கு அருவிய நெடுமலை நாடன் இரந்துகுறை யுறாஅன் பெயரின் என்ஆ வதுகொல்நம் இன்னுயிர் நிலையே. | 228 |
தோழி அறத்தொடு நின்றது.... அம்ம வாழி, தோழி! நம் ஊரில் தெளிவாகத் தோன்றும் அருவியை உடைய நாட்டின் தலைவன் அவன். அவன் நம் தாய் தந்தையரிடம் கெஞ்சிக் கேட்டு என்னைப் பெறானாயின் என் உயிர் என்ன ஆகுமோ தெரியவில்லை.
அம்ம வாழி தோழி நாம்அழப் பன்னாள் பிரிந்த அறனி லாளன் வந்தன னோமற்று இரவில் பொன்போல் விறல்கவின் கொள்ளுநின் நுதலே. | 229 |
தோழி தலைவியிடம்... அம்ம வாழி, தோழி! நாம் அழும்படி பல நாள் நம்மைப் பிரிந்திருந்த ‘அறனிலாளன்’ வந்திருக்கிறானோ? இந்த இரவில், உன் முகம் பொன் போல் பூத்து அழகுடன் திகழ்கிறதே!
அம்ம வாழி தோழி நம்மொடு சிறுதினைக் காவல் நாகிப் பெரிதுநின் மெல்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும் பொன்போல் விறற்கவின் தொலைத்த குன்ற நாடற்கு அயர்வர்நன் மணனே. | 230 |
தோழி தலைவியிடம்... அம்ம வாழி, தோழி! தினைப் புனம் காத்தபோது நமக்குப் பாதுகாப்பாக இருந்தவன், இல்லாமையால், பெரிதும், உன் மென்மையான தோள் நெகிழ்ந்து மெலிகிறது. உன் நெற்றி பசக்கிறது. பொன் போல் திகழ்ந்த உன் மேனி அழகு தொலைந்துவிட்டது. அந்தக் குன்ற நாடனுக்கு நம் பெற்றோர் மணம் முடித்துத் தருவர். கவலை வேண்டா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, வாழி, அம்ம, நம்மலை, லாளன், நெகிழவும், பொன்போல், விறற்கவின், கொண்ட, நம்மூர், லோரே, நறுந்தண்