முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 22. அன்னாய்ப் பத்து
ஐங்குறுநூறு - 22. அன்னாய்ப் பத்து
இப்பாடல்களில் அன்னை என்னும் சொல் தாயையோ, தோழியையோ, தலைவியையோ விளிக்கும் சொல்லாக வருகிறது. தோழியர் இக்காலத்திலும் ‘அம்மா தாயே’ என்று விளிப்பர்.
நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழி வாடும் அன்னாய். | 211 |
தோழி தலைவியிடம்... நெய் கனிந்திருக்கும் உளுந்து வயலில் காய்த்திருப்பது போல அவர் உனக்காக வயலை, செயலைத் தழைகளால் கட்டிய தழையாடை வாடிக்கொண்டிருக்கிறது தாயே. ஏற்றுக்கொள்.
சாந்த மரத்ட பூதிழ் எழுபுகை கூட்டுவிரை கமழும் நாடன் அறவற்கு எவனோ நாமக்ல்வு அன்னாய் | 212 |
தோழி செவிலியிடம்... சந்தன மரத்திலிருந்து எழும் துகள்-புகையின் மணம் எங்கும் கூடி மணக்கும் நாடன் அவன். அவனுக்கு மணம் முடித்துத் தருவதிலிருந்து நாம் ஏன் அகலவேண்டும்?
நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த ஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர் உறைவீழ் ஆலியல் தொகுக்கும் சாரல் மீமிசை நன்னாட் டவர்வரின் யானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய். | 213 |
தலைவி தோழியிடம்... இனிக்கும் மாமரத்தின் வடுக்கள் காம்பு-மூக்கு அறுந்து பாலை நிலத்தில் பொழியும் மழையில் விழும் பனிக்கட்டி போல, விழும். அங்குள்ள நன்னாட்டுக் குறவர் மக்கள் அவற்றைத் தொகுத்து வைத்துக்கொள்வர். அவனுடைய அந்த நாட்டவர் அவனுக்கு என்னைப் பெண் கேட்டு வந்தால் நான் உயிர்வாழக் கூடும் தாயே.
சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம் இருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில் பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன் பேரமர் மழைக்கண் கழிலத்தன் சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய். | 214 |
தலைவி தோழியிடம்... மலைச்சாரலில் கொழுத்த இலைத் தளிருடன் இருக்கும் பலாப்பழம் கல்லுக் குகையில் விழ, அங்குள்ள தேன் கூடு சிதறும் நாட்டை உடையவன் அவன். விரும்பி மழை பொழியும் என் கண்ணை அழ விட்டுவிட்டுத் தன் நாட்டுக்குச் செல்கிறான், தாயே.
கட்டளை யன்ன மணிநிறத் தும்பி இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர் தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர் தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் புதன்மலர் மாலையும் பிரிவோர் இதனினும் கொடிய செய்குவர் அன்னாய். | 215 |
தலைவி தோழியிடம்... பொன்னை மாற்றுப் பார்க்கும் கட்டளைக் கல் போன்ற நிறம் கொண்ட தும்பி வண்டுகள் மூங்கிலில் குடைந்த துளை வழியாக உள்ளே செல்லும்போது குழல் இசை போல் ஒலிக்கின்றன. தட்டை, தண்ணுமை இசைக்கருவிகளின் இசைப் பின்னணியில் ஒலிக்கின்றன. முல்லைப் பூக்கள் புதர்களில் பூத்துக் கிடக்கின்றன. இது மாலை வேளை. இந்த மாலை வேளையில் இவரும் பிரிந்து சென்று கொடுமைப் படுத்துகிறாரே, சரியா தாயே.
குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரை நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின் பழந்தாங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக் கொய்திடு தளிரின் வாடிநின் மெய்பிறி தாதல் எவன்கொல் அன்னாய். | 216 |
தோழி தலைவியிடம்... இரையைப் பற்றுவதில் வல்லமை மிக்க குறுகிய கைகளை உடைய ஆண்புலியானது, நீண்ட புதருக்கு இடையில் பெண்யானை போட்டிருக்கும் யானைக் குட்டியைக் கவர்வதற்காக பலா மர நிழலில் பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டை உடையவன் அவன். அவனை நினைத்து உன் மேனியானது மாறுபட்டு, கொய்யப்பட்ட தழை வாடுவது போல வாடுகிறதே, தாயே.
பெருவரை வேண்க்கைப் பொன்மருள் நறுவீ மானினப் பெருங்கிளை மேயல் ஆரும் கானக நாடன் வரவுமிவண் மேனி பசப்பது எவன்கொல் அன்னாய். | 217 |
தோழி தலைவியிடம்... பெருமலையில் வேங்கை மலர் பொன்னை மருட்டிக்கொண்டு பூத்திருக்கிறது. அந்தப் பூக்களை மான் சுற்றம் மேய்ந்து பசியாறுகிறது. இப்படிப்பட கானக நாட்டை உடையவன் அவன். அவன் வந்தும் இவளது மேனி பசலை பூத்துக் கிடக்கிறதே. சில நாட்களுக்கு வரமாட்டேன் என்று சொல்லியிருப்பானோ?.
நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும் மயிர்வார் முன்கை வளையும் சொறூஉம் களிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுலி எழுதரு மழையின் குழுமும் பெருங்கள் நாடன் வருங்கொல் அன்னாய். | 218 |
தோழி தலைவியிடம்... உன் கண்ணின் அழகிய புருவங்கள் ஆடுகின்றன. மயிர் செறிந்த உன் கைகளில் வளையல்கள் செறிவாக உள்ளன. யானையைப் பற்றி ஏமாந்து போன புலி சினத்தில் முழங்கும் ஒலி இடி போல் முழங்குகிறது. உன் தலைவன் பெருங்கல் நாடன் வருகிறான் போலத் தோன்றுகிறது, தாயே.
கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ இருங்கள் வியலறை வரிப்பத் தாஅம் நன்மலை நாடன் பிரிந்தென ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய். | 219 |
தலைவி தோழியிடம்... கருநிறக் காம்பினை உடைய பொன்னிற வேங்ககைப் பூக்கள் பாறையின் மேல் உதிர்ந்து பாறைக்குப் பொன்தகடு வேய்ந்தது போல் போர்த்திக் கிடக்கும் நாட்டினை உடையவன் அவன். அவன் பிரிந்து சென்றுவிட்டான் என்று என் நெற்றி பசந்து கிடக்கிறதே, ஏன் தாயே?.
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாள்இவள் மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய். | 220 |
தோழி செவிலியிடம்... அடித்துப் பொழிந்த மழையால் அகன்ற இடம் கொண்ட அருவி மூங்கில் அடர்ந்த காட்டில் பாயும் நாட்டை உடையவன் அவன். மலை போன்றதும், அழகில் வீறாப்பு கொண்டதுமான அவனது அகன்ற மார்பினைத் தழுவாமல், உன் மகளாகிய இவளது கண்களில் நீர் கசிகிறது, தாயே.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்னாய், நாடன், எவன்கொல், பசப்பது, யன்ன, பெருவரை, இருங்கள், சாரல், பலவின், மழைக்கண்