முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 17. சிறுவெண் காக்கைப் பத்து.
ஐங்குறுநூறு - 17. சிறுவெண் காக்கைப் பத்து.
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை – என்று எல்லாப் பாடல்களும் தொடங்குகின்றன. இந்தக் காக்கை வாழும் துறைவன் அவன். தலைவியும் தோழியும் அவன் இயல்புகளைப் பழித்தும் போற்றியும் கூறும் செய்திகள் இதில் உள்ளன.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப் பயந்தநுதல் அழியச் சாஅய் நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்தே. | 161 |
துறைவனுக்காக ஏங்கிக்கொண்டு என் நெற்றி அழகு இழந்து பசப்பு ஊறிக் கிடக்கிறதே! நெஞ்சம் அவனையே விரும்பிக்கொண்டு இருக்கிறதே! என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! – என்று தலைவி தோழியிடம் தன்னையே நொந்துகொள்கிறாள். -- வெண்காக்கை புன்னைமரத்தில் தங்கும் துறை.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவன் சொல்லோ பிறவா யினவே. | 162 |
சிறுவெண்காக்கை பெரிய உப்பங்கழியில் இரை தேடி உண்டுவிட்டு பூஞ்சோலையில் நிம்மதியாகத் தங்கும் துறைவன் அவன். அவனும் காக்கை போலவே என்னை உண்டு மகிழ்ந்துவிட்டுத் திரும்பவும் வராமல் தங்கிவிட்டானே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும் துறைவன் துறந்தெனத் துறந்துஎன் இறையேர் முன்கை நீக்கிய வளையே. | 163 |
துறைவன் விட்டுவிட்டான் என்று என் கையில் இருக்கும் வளையல்களும் கழன்று நழுவுகின்றனவே. சிறுவெண்காக்கை கழியில் எழும் அலைத்துளியின் ஒலியைக் கேட்டுக்கொண்டே உறங்கும் துறை.
இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி மருங்கின் அயிரை ஆரும் தண்ணந் துறைவன் தகுதி நம்மோடு அமையாது அலர்பயந் தன்றே. | 164 |
துறைவன் உறவு நமக்கு மட்டுந்தான் தெரியும் என்று எண்ணியிருந்தேன். ஊரெல்லாம் பேசிக்கொள்கிறதே. சிறுவெண்காக்கை கழியில் அயிரை மீனை உண்ணும் துறை.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை ஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும் துறைவன் சொல்லிய சொல்என் இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே. | 165 |
துறைவன் ஏதேதோ சொல்லி என்னை நம்ப வைத்தான். அவன் சொற்கள் இப்போது என் வளையல்களைக் கழன்று விழச் செய்ததுதான் மிச்சம். நீர் வற்றும் கழியில் சிறுவெண்காக்கை சிறுமீன்களை பற்றி விழுங்கும் துறை.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை வரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம் மெல்லம் புலம்பன் தேறி நல்ல வாயின நல்லோள் கண்ணே. | 166 |
புலம்பன் தனக்காகத் தொலைவில் காத்திருப்பதைப் பார்த்த தலைவியின் கண் களைதட்டியது. சிறுவெண்காக்கை தாலி வளையைப் பார்த்ததும் நடுங்கும் புலம்புநிலம் (நெய்தல்-நிலம்) தாலி = உடும்பு. இங்கு வரிக்கோடுகளை உடைய வெள்ளைநிற உடும்பு சொல்லப்படுகிறது.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன் நல்குவன் போலக் கூறி நல்கான் ஆயினும் தொல்கே என்னே. | 167 |
துறைவன் உனக்கு என்னைத் தருவேன் என்று கூறிவிட்டு, தராமல் இருந்தாலும் என் நட்புக்காதலன்-தான் – தலைவி சொல்கிறாள். சிறுவெண்காக்கை கழியில் கெடிறு (கெழுத்தி) மீனை வயிறார உண்ணும் துறை அது.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை துறைபடி யம்பி அகமனை ஈனும் தண்ணந் தூறைவன் நல்கி ஒள்நுதல் அரிவை பாலா ரும்மே. | 168 |
துறைவன் திருமணக் கொடையால் அரிவை பெண்மைப் பாலில் நிறைவு கொள்வாள். (கருவுறுவாள்) சிறுவெண்காக்கை துறையில் நிறுத்தப்பட்டிருக்கும் அம்பிக்கு அடியில் முட்டையிடும். – தோழி சொல்கிறாள்.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை பொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ் புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன் நெஞ்சத்து உண்மை யறிந்தும் என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே. | 169 |
அங்கும் இங்கும் இருத்தல் துறைவன் இயல்புதான். இது தெரிந்திருந்தும் என் கண் அவனைக் காணப் பசபசக்கிறதே! என்ன செய்யப்போகிறது. சிறுவெண்காக்கை ஞாழல் பூத்திருக்கும் கிளை பிடிக்கவில்லை என்றால் பூத்திருக்கும் புன்னைக் கிளைக்குச் சென்று தங்கிக்கொள்ளும் துறை.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன் நல்லன் என்றி யாயின் பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ. | 170 |
துறைவன் நல்லவன் என்றால் என் கண் அவனைக் காணப் பசபசக்கிறதே! ஏன்? – தலைவி தோழியைக் கேட்கிறாள். சிறுவெண்காக்கை கழியில் இருக்கும் நெய்தல் பூக்களைச் சிதைக்கும் துறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிறுவெண், காக்கை, கரையது, பெருங்கடற், துறைவன், இருங்கழி, கண்ணே, தண்ணந், ஆரும், சேக்கும்