முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 12. தோழிக்கு உரைத்த பத்து.
ஐங்குறுநூறு - 12. தோழிக்கு உரைத்த பத்து.
தலைவன் வரவுக்காக மனம் இரங்குதலைக் கூறுவது நெய்தல் திணை. நெய்தல் நிலத் தலைவி இப்படி மனம் இரங்கித் தன் தோழியிடம் கூறும் செய்திகள் இதில் உள்ளன. அம்ம வாழி தோழி – என்று எல்லாப் படல்களும் தோழியை விளித்துக் கூறுகிறது.
அம்ம வாழி தோழி பாணன் சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல் ஆற்றா தேமே. | 111 |
கழியில் வாழும் சினை கொண்ட கயல்மீன் தூண்டில் கயிற்றில் தொங்கும் இரையை விழுங்கிவிட்டுத் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் துறையை உடையவனின் நட்பினைக் கொண்ட நான் அவனைப் பிரிந்து வாழமுடியுமா? அவனோடு சேர்ந்து வாழத் தவம் செய்து ஊழ்வலிமையைப் பெற்றிருக்கவில்லையே. (அவன் உறவால் அவள் கருவுற்றிருத்தல் சினைக்கயல் என்னும் இறைச்சிப் பொருளால் உணர்த்தப்பட்டுள்ளது.)
அம்ம வாழி தோழி பாசிலைச் செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன் தான்வரக் காண்குவம் நாமே மற்ந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே. | 112 |
பசுமையான இலை கொண்ட செருந்தி உப்பங்கழிப் பரப்பில் பூத்துக் கிடக்கும் சேர்மிக்க சேர்ப்புநிலத் தலைவன் அவன். அவன் வருவதை முன்பெல்லாம் கண்டு இன்புற்ற நாம் இப்போது அவனை நெஞ்சம் மறக்கும் நிலை ஆயிற்றே. இதனை வெளியில் சொல்லவும் நெஞ்சம் நாணுகிறதே.
அம்ம வாழி தோழி நென்னல் ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு ஊரார் பெண்டென மொழிய என்னை அதுகேட் டன்னாய் என்றனள் அன்னை பைபய வெம்மை என்றனென் யானே. | 113 |
கடலலை மணலை உடைக்கும் துறைவன் அவன். ஊரார் என்னை அவன் பெண்டு (பெண்டாட்டி) என்றனர். அதனைக் கேட்ட தாய் என்னை உண்மையா எனக் கேட்பாள் போல ‘அன்னாய்’ என விளித்தாள். நானும் அதனை ஒப்புக்கொள்பவள் போல மெதுவாக ‘எம்மை’ (என் தாய் அல்லவா) என்று வாய் விரித்தேன்.
அம்ம வாழி தோழி கொண்கன் நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ கடலின் நாரை இரற்றும் மடலம் பெண்ணை அவனுடை நாட்டே. | 114 |
அவன் நாட்டுப் பனைமரத்தில் இருந்துகொண்டு நாரை ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அவன் நாட்டுக்கு நாம் செல்லலாமா. அவனுக்கு நம்மை தராவிட்டாலும் சும்மா அவனைப் பார்க்கலாமே.
அம்ம வாழி தோழி பன்மாண் நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய தண்ணந் துறைவன் மறைஇ அன்னை அருங்கடி வந்துநின் றோனே. | 115 |
தண்ணம் துறைவன் (குளுமையானவன்) கள்ளத்தனமாக கடலோர நுண்மணல் கரைக்கு வந்து பலமுறை நம்மோடு விளையாடினான். இப்போது அன்னை நம்மைக் காப்பிட்டுச் சிறை வைத்திருக்கும் இடத்திற்கே வந்துவிட்டானே.
அம்ம வாழி தோழி நாம் அழ நீல இருங்கழி நீலம் கூம்பு மாலைவந் தன்று மன்ற காலை யன்ன காலைமுந் துறுத்தே. | 116 |
நாம் அழுவதைப் பார்த்து நீலநிற உப்பங்கழியில் மலர்ந்திருந்த நீலம்-பூ குவிகிறது. அம் அழும், நீலமலர் குவியும் மாலை நேரம் வந்துவிட்டதே. காலைநேரம் போன்ற காலம் முந்தி இருந்ததே! (இப்போது அழும் காலம் ஆகிவிட்டதே.
அம்ம வாழி தோழி நலனே இன்ன தாகுதல் கொடிதே புன்னை யணிமலர் துறைதொறும் வரிக்கும் மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே. | 117 |
துறையெல்லாம் புன்னைமலர் கொட்டிக்கிடக்கும் நீலக்கடல் (மணிநீர்) சேர்ப்பன் அவன். அவனை நான் மறக்கவில்லையே. அப்படி இருந்தும் என் அழகுநலம் இப்படி ஆகிக் கெட்டொழுந்துவிட்டதே.
அம்ம வாழி தோழி யான் இன்று அறன்இ லாளன் கண்ட பொழுதில் சினவுவென் தகைக்குறவன் சென்றனென் பின்நினைந்து இரங்கிப் பெயர்தந் தேனே. | 118 |
எனக்கு அளி செய்யாத அறன் இல்லாத ஆளனை இன்று கண்டேன். அப்போது மிகுந்த சினம் கொண்டவள் போலச் சென்றேன். பின்னர் நினைத்துப் பார்த்துவிட்டு இரக்கத்தோடு திரும்பிவிட்டேன்.
அம்ம வாழி தோழி நன்றும் எய்யா மையின் ஏதில பற்றி அன்பிலன் மன்ற பெரிதே மென்புலக் கொண்கன் வாரா தோனே. | 119 |
அவன் நன்றாக இருக்கிறான். எய்யாமல் (இளைக்காமல்) இருக்கிறான். ஏதோ மனத்தில் பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு இருக்கிறான். அதனால் அன்பு இல்லாதவனாக இருக்கிறான். மென்புல (சேர் மிக்க சேற்றுநில)க் கொண்கன் ஆயிற்றே. அப்படித்தான் இருப்பான். (கொண்கன் = கொண்டவன், கணவன்).
அம்ம வாழி தோழி நலமிக நல்ல ஆயின அளியமெல் தோளே மல்லல் இருங்கழி நீரறல்விரியும் மெல்லம் புலம்பன் வந்த மாறே. | 120 |
அவன் மெல்லம் புலம்பன். (சேர் மிக்க நிலத்தவன்) அவன் வந்துவிட்டான். இப்போது என் உடல்நலம் நன்றாக இருக்கிறது. தோளும் அவனது அளியைப் பெறும். (தழுவுவான்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அம்ம, தோழி, வாழி, மன்ற, இருங்கழி, கொண்கன், நாமே, துறைவன், அன்னை