புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - சஞ்சீவி பர்வதத்ததின் சாரல்
குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்கஉண்டு; பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே |
5 |
னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்; வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு; காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு. நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார். |
10 |
சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே ஓர்நாளில் கொஞ்சம் குறையமணி நான்காகும் மாலையிலே குப்பன்எனும் வேடக் குமரன் தனியிருந்து செப்புச் சிலைபோலே தென்திசையைப் பார்த்தபடி ஆடா தசையாமல் வாடிநின்றான். சற்றுப்பின், |
15 |
வாடாத பூமுடித்த வஞ்சிவரக் கண்டான். வரக்கண்ட தும்குப்பன் வாரி அணைக்கச் சுரக்கின்ற காதலொடு சென்றான். -"தொடாதீர்கள்!" என்று சொன்னாள் வஞ்சி இளையான் திடுக்கிட்டான். குன்றுபோல் நின்றபடி குப்பன் உரைக்கின்றான்; |
20 |
"கண்ணுக்குள் பாவையே!கட்டமுதை நான்பசியோ டுண்ணப்போம் போதுநீ ஓர்தட்டுத் தட்டிவிட்டாய்! தாழச் சுடுவெய்யில் தாளாமல் தான்குளிர்ந்த நீழலைத்தா வும்போது நில்என்று நீ¦தடுத்தாய்! தொட்டறிந்த கையைத் தொடாதேஎன் றாய்! நேற்றுப் |
25 |
பட்டறிந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ? உன்னோடு பேச ஒருவாரம் காத்திருந்தேன்; என்னோடு முந்தாநாள் பேச இணங்கினாய்! நேற்றுத்தான் இன்பக் கரைகாட்டி னாய்! இன்று சேற்றிலே தள்ளிவிட்டாய்! காரணமும் செப்பவில்லை" |
30 |
என்றுரைக்கக் கேட்ட இளவஞ்சி, 'காதலரே! அன்றுநீர் சொன்னபடி அவ்விரண்டு முலிகையைச் சஞ்சீவி பர்வதத்தில் தையலெனைக் கூட்டிப்போய்க் கொஞ்சும் பறித்துக் கொடுத்தால் உயிர்வாழ்வேன். இல்லையென்றால் ஆவி இரா' தென்றாள். வேட்டுவன்; |
35 |
'கல்லில் நடந்தால்உன் கால்கடுக்கும்' என்றுரைத்தான். 'கால்இரண்டும் நோவதற்குக் காரணமில்லை. நெஞ்சம், மூலிகைஇ ரண்டின்மேல் மொய்த்திருப்பதால்' என்றாள், 'பாழ்விலங்கால் அந்தோ! படுமோசம் நேரும்' என்றான். 'வாழ்வில் எங்கும் உள்ளதுதான் வாருங்கள்' என்றுரைத்தாள். |
40 |
'அவ்விரண்டு மூலிகையின் அந்தரங்கம் அத்தனையும். இவ்விடத்திற் கேட்டுக்கொள்' என்றுரைப்பான் குப்பன்: 'ஒன்றைத்தின் றால்இவ் வுலகமக்கள் பேசுவது நன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில்போட்டால் மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி |
45 |
கண்ணுக் கெதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன்; ஆதலால் மூலிகையின் ஆசை தணி' என்றான். 'மோதிடுதே கேட்டபின்பு மூலிகையில் ஆசை' என்றாள். 'என்னடி!பெண்ணேநான் எவ்வளவு சொன்னாலும் சொன்னபடி கேட்காமல் தோஷம் விளைக்கின்றாய் |
50 |
பெண்ணுக் கிதுதகுமோ?வண்ணமலர்ச் சோலையிலே, எண்ணம்வே றாகிஇருக்கின்றேன் நான்' என்று கண்ணை அவள் கண்ணிலிட்டுக் கையேந்தி நின்றிட்டான். 'பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ? மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை? |
55 |
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே. ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும் ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு. புலன் அற்றபேதையாய்ப் பெண்ணைச்செய் தால் அந் |
60 |
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே, சித்ரநிகர் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரதநற் புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது? சற்றுந் தயங்கேன் தனியாய்ச்சஞ் சீவிமலை உற்றேறி மூலிகையின் உண்மை அறிந்திடுவேன்; |
65 |
மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன். ஊரிலுள்ள பெண்களெல்லாம் உள்ளத்தைப் பூர்த்திசெயும் சீரியர்க்கு மாலையிட்டுச் சீரடைந்து வாழ்கின்றார். தோகை மயிலே!இதைநீகேள் சொல்லு கின்றேன். நாகம்போல சீறுகின்ற நாதரிடம் சொல்லிவிடு. |
70 |
பச்சிலைக்குச் சஞ்சீவி பர்வதம்செல் வேன் என்றாள். 'அச்சுப் பதுமையே! ஆரணங்கே! நில்லேடி! நானும் வருகின்றேன் நாயகியே! நாயகியே! ஏனிந்தக் கோபம்? எழிலான காதலியே! என்றுகுப்பன் ஓடி இளவஞ்சியைத் தழுவி |
75 |
நின்றான். இளவஞ்சி நின்று மகிழ்வுற்றாள். 'அவ்விரண்டு மூலிகையில் ஆரணங்கே நீ ஆசை இவ்வளவு கொண்டிருத்தல் இப்போது தான் அறிந்தேன். கூட்டிப்போய்ப் பச்சிலையைக் கொய்து தருகின்றேன்; நீட்டாண்மைக் காரி! எனக்கென்ன நீதருவாய்?' |
80 |
என்று மொழிந்தான் எழுங்காத லால்குப்பன், முன்னே இலைகொடுத்தால் முத்தம் பிற' கென்றாள், 'என்கிளியே நீமுத்தம் எத்தனைஈ வாய்?' என்றான், 'என்றன் கரத்தால் இறுக உமைத்தழுவி நோகாமல் முத்தங்கள் நூறுகொடுப்பேன்' என்றாள், |
85 |
'ஆசையால் ஒர் முத்தம் அச்சாரம் போ'டென்றான். 'கேலிக்கு நேரம் இதுவல்ல, கேளுங்கள் மூலிகைக்குப் பக்கத்தில் முத்தம் கிடைக்கும்' என்றாள். குப்பன் தவித்திட்டான், காதற் கொடுமையினால், எப்போது நாம்உச்சிக் கேறித் தொலைப்பதென |
90 |
அண்ணாந்து பார்த்திட்டான் அம்மலையின் உச்சிதனை! கண்ணாட்டி தன்னையும்ஓர் கண்ணாற் கவனித்தான். வஞ்சிஅப் போது மணாளன் மலைப்பதனைக் கொஞ்சம் அவமதித்துக் கோவை உதடு திறந்தாள், திறந்து சிரிக்குமுன்,குப்பன் |
95 |
பறந்தான் பருவதமேல் பாங்கியையும் தூக்கியே. கிட்டரிய காதற் கிழத்தி இடும்வேலை விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம், |
100 |
மாமலைதான் சென்னி வளைந்து கொடுத்ததுவோ, நாம்மலைக்கக் குப்பன் விரைவாய் நடந்தானோ, மங்கையினைக் கீழிறக்கி, மாதே! இவைகளே அங்குரைத்த மூலிகைகள்; அட்டியின்றிக் கிள்ளிக்கொள் என்றுரைத்தான் குப்பன், இளவஞ்சி தான்மகிழ்ந்து |
105 |
சென்று பறித்தாள். திரும்பிச் சிறிதுவழி வந்தார்கள், அங்கோர் மரத்து நிழலிலே சிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள். மூலிகையில் ஓர் இனத்தை முன்னே இருவருமாய் ஞாலத்துப் பேச்சறிய நாக்கிலிட்டுத் தின்றார்கள், |
110 |
வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின் 'நெஞ்சம் வசமாக' நேரில் அவர் பேசுதல்போல் செந்தமிழில் தங்கள் செவியிற்கேட் கப்பெற்றார். அந்த மொழிகள் அடியில் வருமாறு: 'இத்தாலி தேசம் இருந்து நீ இங்கு வந்தாய் |
115 |
பத்துத் தினமாகப் பாங்காய் உணவுண்ண இவ்விடுதி தன்னில் இருந்து வருகின்றாய்! எவ்வாறு நான் சகிப்பேன் இந்தக் கறுப்பன் எனக்கெதிரே உட்கார்ந் திருப்பதனை' என்றாய்; 'தனக்கெனவே நல்உணவுச் சாலைஒன் றுண்டாக்கி |
120 |
அங்கவன் சென்றால் அடுக்கும் என உரைத்தாய்; "இத்தாலிச் சோதரனே! என்ன மதியுனக்கே? செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும் இவ்வுலக மக்களிலே என்னபே தங்கண்டாய்? செவ்வைபெறும் அன்பில்லார் தீயபே தம்கொள்வார், |
125 |
எங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித் தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்; பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ! போ! போ! பேதம்கொண் டோர்க்குப் பிராஞ்சில் இடமில்லை. என்ற மொழிகள் இவர்காதில் கேட்டவுடன் |
130 |
நன்று பிராஞ்சியர்க்கு நாக்குளிர வாழ்த்துரைத்தார்" பின்னர் அமெரிக்கன் பேசுவதைக் கேட்டார்கள். அன்னவன் பேச்சும் அடியில் வருமாறு: 'நல்ல அமெரிக்கன் நானிலத்தில் வாழ்கின்ற எல்லாரும் நன்றாய் இருக்க நினைத்திடுவான், |
135 |
பொல்லா அமெரிக்கன் பொன்னடைந்து தான்மட்டும் செல்வனாய் வாழத் தினமும் நினைத்திடுவான். நல்லவனாய் நானிருக்க நாளும் விரும்புகிறேன்' சொல்லும் இதுகேட்ட தோகையும் குப்பனும் 'கொத்தடிமை யாகிக் குறைவுபடும் நாட்டுக்கு |
140 |
மெத்ததுணை யாகியிவன் மேன்மை அடைக' என்றார். இங்கிலாந்து தேசம் இருந்தொருவன் பேசினான் நாவலந் தீவு நமைவிட்டுப் போகாது. வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்; ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான். |
145 |
ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே? பேதம் வளர்க்கப் பெரும்பெரும்பு ராணங்கள்! சாதிச்சண்டை வளர்க்கத் தக்க இதி காசங்கள்! கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக் கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார், |
150 |
தேன்சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத் தின்னுதற்கு வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார். இந்த உளைச்சேற்றை, ஏறாத ஆழத்தை எந்தவிதம் நீங்கி நமைஎதிப்பார்? இன்னமும், சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத் |
155 |
தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச் சாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப் பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக் கற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே, |
160 |
இந்த நிலையிற் சுதந்தரப் போரெங்கே? கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே? 'தேகம் அழிந்துவிடும்; சுற்றத்தார் செத்திடுவார்; போகங்கள் வேண்டாம்; பொருள்வேண்டாம் மற்றுமிந்தப் பாழுலகம் பொய்யே பரமபதம்போ' என்னும் |
165 |
தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம். சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும், நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும், மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே ஓடச்செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்' |
170 |
இந்தப் பிரசங்கம் இவ்விருவர் கேட்டார்கள்; சொந்த நிலைக்குத் துயருற்றார், வஞ்சி சிலைபோல் இருந்தாள்; திகைத்தாள்; பின் நாட்டின் நிலையறிய நேர்ந்தது பற்றி மகிழ்ந்திட்டாள்! 'பச்சிலையால் நல்ல பயன்விளையும் என்று சொன்னாள்! |
175 |
பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள். 'இந்த இலையால் இனிநன்மை கொள்க' என்று சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து, 'வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி சொல்லிஎனைத் தூக்கிவந்து சூக்ஷ¦மத்தைக் காட்டிய கண் |
180 |
ணாளர்தாம் வாழ்வடைக' என்றாள்; அவனுடைய தோளை ஒருதரம் கண்ணாற் சுவைபார்த்தாள். அச்சமயம் குப்பன், அழகியதன் தாய்நாட்டார் பச்சைப் பசுந்தமிழில் பேசுவதைக் கேட்டிருந்தான்; குப்பனது தோளில் குளிர்ந்தமலர் ஒன்றுவிழ |
185 |
இப்பக்கம் பார்த்தான்; வஞ்சி இளங்கையால் தட்டிய தட்டென்று சந்தேகம் தீர்ந்தவனாய்க் 'கட்டிக் கரும்பே! கவனம் எனக்கு நமது தேசத்தில் நடக்கின்ற பேச்சில் அமைந்து கிடக்கு' தென்றான், வஞ்சி அதுகேட்டே |
190 |
'அன்னியர்கள்' பேசுவதில் அன்பைச் செலுத்துங்கள்; கன்னத்தை மாத்திரம்என் கையிற் கொடுங்களென்றாள், 'அன்பும் உனக்குத்தான்; ஆருயிரும் உன்னதுதான் இன்பக் கிளியே! எனக்களிப்பாய் முத்த'மென்றான். கையோடு கைகலந்தார்; முத்தமிடப்போகையிலே |
195 |
ஐயையோ! ஐயையோ!என்ற அவலமொழி காதிலே வீழ்ந்தது! முத்தம் கலைந்ததே! ஈதென்ன விந்தை?எழில் வஞ்சி!கேள்' என்றான், வஞ்சி கவனித்தாள், சத்தம் வரும்வழியாய்! நெஞ்சைச் செலுத்தினார் நேரிழையும் காதலனும். |
200 |
'ஓர்நொடியிற் சஞ்சீவி பர்வதத்தை ஓடிப்போய் வேரோடு பேர்த்துவர வேண்டுமே ஐயாவே? இப்பாழும் வாக்கை இருவரும் கேட்டார்கள். குப்பன் மிகப்பயந்து கோதைமுகம் பார்த்திட்டான், வஞ்சியவள் நகைத்தே 'இன்ப மணாளரே! |
205 |
சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பெயர்க்கும் மனிதரும் இல்லை! மலையும் அசையா இ னிஅந்தச் சத்தத்தில் எண்ணம் செலுத்தாதீர்' என்றுரைத்தாள் வஞ்சி, இதுசொல்லித் தீருமுன், 'நன்றாக உங்களுக்கு ராமன் அருளுண்டு; |
210 |
வானம் வரைக்கும் வளரும் உடலுண்டே; ஏனிங்கு நின்றீர்? எடுத்துவரு வீர்மலையை' என்றஇச் சத்தம் இவர்செவியில் வீழ்ந்தவுடன் குன்று பெயர்வது கொஞ்சுமும்பொய் யல்லவென்று குப்பன் நடுநடுங்கிக் கொஞ்சுமிள வஞ்சியிடம் |
215 |
'மங்கையே, ராமனருள் வாய்ந்தவனாம்; வானமட்டும் அங்கம் வளர்வானாம்; அப்படிப் பட்டவனை இந்தச்சஞ் சீவிமலை தன்னை யெடுத்துவர அந்த மனிதன்அங்கே ஆணை யிடுகின்றான், நாலடியில் இங்கு நடந்துவந்து |
220 |
'ராமனெங்கே! ராமன் அருளெங்கே! சஞ்சீவி மாமலையைத் தூக்குமொரு வல்லமைஎங்கே! இவற்றில் கொஞ்சமும் உண்மை இருந்தாலும்நாம் கொத்தவரைப் பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்பதரி தாகி அடிமையாய் வாழோமே? ஆண்மைதான் இன்றி |
225 |
மிடிமையில் ஆழ்ந்து விழியோமே?' என்றந்த வஞ்சி யுரைத்தாள், பின்மற்றோர் பெருஞ்சத்தம், அஞ்சுகின்ற குப்பன் அதிரச்செய் திட்டதே: 'அம்மலையை ஓர்நொடியில் தூக்கிவந் தையாவே உம்எதிரில் வைக்கின்றேன் ஊஹீஹீஊஹீஹீ |
230 |
குப்பன் பதைத்தான் குடல்அறுந்து போனதுபோல். 'எப்படித்தாம் நாம்பிழைப்போம்? ஏதும் அறிகிலேன் சஞ்சீவி பர்வதத்தைத் தாவித் தரையோடு பஞ்சிருக்கும் மூட்டைபோல் பாவி அவன்எவனோ தூக்குகின்றான்! வஞ்சி;சுகித்திருக்க எண்ணினையே! |
235 |
சாக்காடு வந்ததடி! தக்கவிதம் முன்னமே நம்பென்று நான்சொன்ன வார்த்தையெல்லாம் நம்பாமல் வம்பு புரிந்தாய்! மலையும் அதிர்ந்திடுதே! முத்தம் கொடுத்து முழுநேர மும்தொலைத்தாய் செத்துமடியும் போது முத்தம் ஒருகேடா? |
240 |
என்றனுயி ருக்கே எமனாக வாய்த்தாயே! உன்றன் உயிரைத்தான் காப்பாற்றிக் கொண்டாயா? தூக்கிவிட்டான்! தூக்கிவிட்டான்! தூக்கிப்போய்த் தூளாக ஆக்கிச் சமுத்திரத்தில் அப்படியே போட்டிடுவான்! எவ்வாறு நாம் பிழைப்போம்? ஏடி, இதைநீதான் |
245 |
செவ்வையாய் யோசித்துச் செப்பாயோ ஓர்மார்க்கம்?' என்று துடிதுடிக்கும் போதில், இளவஞ்சி நின்று நகைத்துத்தன் நேசனைக் கையால் அணைத்தே 'இப்புவிதான் உண்டாக்கி எவ்வளவு நாளிருக்கும், அப்போது தொட்டிந்த அந்திநே ரம்வரைக்கும் |
250 |
மாமலையைத் தூக்கும் மனிதன் இருந்ததில்லை, ஓமண வாளரே! இன்னம் உரைக்கின்றேன், மன்னும் உலகம் மறைந்தொழியும் காலமட்டும் பின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை, அவ்வாறு ஓர்மனிதன் ஆகாயம் பூமிமட்டும் |
255 |
எவ்வாறு நீண்டு வளருவான்? இல்லைஇல்லை; காதல்நிசம். இக்கனிமுத்தம் மிக்க உண்மை! மாதுதோள் உம்தோள் மருவுவது மெய்யாகும் நம்புங்கள் மெய்யாய் நடக்கும் விஷயங் களிவை, சம்பவித்த உண்மை அசம்பாவத்தால் தாக்குறுமோ? |
260 |
வாழ்க்கை நதிக்குவீண் வார்த்தைமலை யும்தடையோ? வாழ்த்தாமல் தூற்றுகின்றீர் வந்துநிற்கும் இன்பத்தை பொய்யுரைப்பார் இந்தப் புவியை ஒருசிற்றெறும்பு கையால் எடுத்ததென்பார் ஐயோஎன் றஞ்சுவதோ? முத்தத்தைக் கொள்க முழுப்பயத்தில் ஒப்படைத்த, |
265 |
சித்தத்தை வாங்கிச் செலுத்துங்கள் இன்பத்தில் என்றுரைத்தாள் வஞ்சி இதனாற் பயனில்லை; குன்று பெயர்ந்ததென்று குப்பன் மனம்அழிந்தான்; இந்நேரம் போயிருப்பார்! இந்நேரம் பேர்த்தெடுப்பார்? இந்நேரம் மேகத்தில் ஏறிப் பறந்திடுவார்! |
270 |
உஸ்என்று கேட்குதுபார் ஓர்சத்தம் வானத்தில், விஸ்வரூ பங்கொண்டு மேலேறிப் பாய்கின்றார்' இம்மொழிகேட் டான்குப்பன்; 'ஐயோ' என உரைத்தான் அம்மட்டும் சொல்லத்தான் ஆயிற்றுக் குப்பனுக்கே. உண்மை யறிந்தும் உரைக்கா திருக்கின்ற |
275 |
பெண்ணான வஞ்சிதான் பின்னும் சிரித்து; 'மனத்தை விடாதீர் மணாளரே காதில் இனிவிழப் போவதையும் கேளுங்கள்' என்றுரைத்தாள். வஞ்சியும் குப்பனும் சத்தம் வரும்வழியில் நெஞ்சையும் காதையும் நேராக வைத்திருந்தார்; |
280 |
*இப்படி யாகஅநுமார் எழும்பிப் போய் அப்போது ஜாம்பவந்தன் ஆராய்ந்து சொன்னதுபோல் சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பறந்துமே கொஞ்சநே ரத்தில் இலங்கையிலே கொண்டுவந்து வைத்தார், உடனே மலைமருந்தின் சக்தியால் |
285 |
செத்த இராமனும் லஷ்மணனும் சேர்ந்தெழுந்தார்' உற்றிதனைக் கேட்டகுப்பன் 'ஓஹோ மலையதுதான் சற்றும் ஆசையால் தான்தூக்கிப் போனானே! லங்கையிலே வைத்தானே! லங்கையில்நாம் தப்போமே!, என்றான், நடுக்கம் இதயத்தில் நீங்கவில்லை. |
290 |
'இன்னும் பொறுங்கள்' எனஉரைத்தாள் வஞ்சி. 'பெரும்பாரச் சஞ்சீவி பர்வதத்தைப் பின்னர் இருந்த இடத்தில் அநுமார், எடுத்தேகி வைத்துவிட்டு வந்தார் மறுநிமிஷம் ஆகாமுன் செத்தார்க் குயிர்கொடுத்தார், தெண்டமும்போட்டு நின்றார்! |
295 |
குப்பனிது கேட்டுக் குலுக்கென்று தான்நகைத்தான், 'அப்போதே நானினைத்தேன் ஆபத்திரா தென்று, நான்நினைத்த வண்ணம் நடந்ததுதான் ஆச்சரியம், ஏனடி! வஞ்சி! இனியச்சம் இல்லை' எனறான், 'ஆனாலும் இன்னும் அரைநிமிஷம் காத்திருங்கள்; |
300 |
நானும் அதற்குள்ளே நாதரே, உம்மையொரு சந்தேகம் கேட்கின்றேன், தக்க விடையளிப்பீர்! இந்த மலையில்நாம் ஏறிய பின்நடந்த ஆச்சரிய சம்¢பவந்தான் என்ன? அதையுரைப்பீர்! பேச்சை வளர்த்தப் பிரியப் படவில்லை' |
305 |
என்றாள் இளவஞ்சி; குப்பன் இசைக்கிறான்: 'என்னடி வஞ்சி! இதுவும் தெரியாதா? நாமிங்கு வந்தோம், நமக்கோர் நலிவின்றி மாமலையை அவ்வநுமார் தூக்கி வழிநடந்து லங்கையிலே வைத்தது! ராமன் எழுந்ததும், |
310 |
இங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது! கண்ணே! மலையைக் கடுகளவும் ஆடாமல் கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல் தந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து வைத்திட்ட அந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி! |
315 |
ஆச்சரிய சம்பவத்தைக் குப்பன் அறிவித்தான், பேச்செடுத்தாள் வஞ்சி; பிறகும் ஒருசத்தம்; 'இம்மட்டும் இன்று கதையை நிறுத்துகின்றேன்; 'செம்மையாய் நாளைக்குச் செப்புகின்றேன் மற்றவற்றைச் சத்தியரா மாயணத்திற் சத்தான இப்பகுதி |
320 |
உத்தியாய்க் கேட்டோர் உரைத்தோர்எல் லாருமே இங்குள்ள போகங்கள் எல்லாம் அனுபவிப்பர்; அங்குள்ள வைகுந்தம் அட்டியின்றிச் சேர்வார்கள்; ஜானகீ காந்தஸ் மரணே! ஜயஜயராம்! 'மானேஈ தென்னஎன்றான்' வையம்அறி யாக்குப்பன் |
325 |
'முன்புநான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே சொன்ன 'ஐயையோ' தொடங்கி இதுவரைக்கும் ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற ஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும் பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே, |
330 |
ஆகியதும் இந்த அரிய உழைப்புக்குப் பத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான். சித்த மலைக்கச் சிறிதுமிதில் இல்லை' யென்று கையி லிருந்தஒரு காட்சிதரும் மூலிகையை 'ஐயா இதைவிழுங்கி அவ்விடத்திற் பாருங்கள்' |
335 |
'என்றந்தக் குப்பனிடம் ஈந்துதா னும்தின்றாள், தின்றதும் தங்கள் விழியால் தெருவொன்றில், 'மாளிகையி னுள்ளே மனிதர் கூட்டத்தையும், ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே உட்கார்ந் திருப்பதையும், ஊர்மக்கள் செல்வதையும், |
340 |
பட்டைநா மக்காரப் பாகவதன் ரூபாயைத் தட்டிப்பார்க் கின்றதையும், சந்தோஷம் கொள்வதையும் கண்டார்கள்; கண்டு கடகடவென் றேசிரித்தார், வண்டு விழியுடைய வஞ்சி உரைக்கின்றாள்; 'வானளவும் அங்கங்கள், வானரங்கள் ராமர்கள் |
345 |
ஆனது செய்யும் அநுமார்கள், சாம்பவந்தர், ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்; வீஸ்வரூ பப்பெருமை, மேலேறும் வன்மைகள், உஸ்என்ற சத்தங்கள், அஸ்என்ற சத்தங்கள், எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும், |
350 |
செவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும், இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்? உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால் எள்ளை அசைக்க இயலாது. மானிடர்கள் |
355 |
ஆக்குவதை ஆகா தழிக்குமோ? போக்குவதைத் தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும், மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை எக்களிக்க வேண்டும் இதயத்தில்! ஈதன்றி நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே |
360 |
புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும். மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ? எக்கா ரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ? மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை நாடா திருப்பதற்கு நானுங் களையின்று |
365 |
சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன். தற்செயலாய் அஞ்சும் நிலைமையே அங்கே நிகழ்ந்ததுண்டாம். உங்கள் மனதில் உறைந்து கிடந்திட்ட பங்கஞ்செய் மூடப் பழக்க வழக்கங்கள் இங்கினிமேல் நில்லா எனநான் நினைக்கின்றேன். |
370 |
தங்கள்கை நீட்டித் தமியாளை முன்னரே சாரலிலே முத்தம் தரக்கேட்டீர், சாயவில்லை, ஈர மலையிலே யான்தந்தேன் ஏற்கவில்லை, சத்தத்தை எண்ணிச் சலித்தீர். அச்சத்தத்தால் முத்தத்தை மாற்ற முடியாமற் போனாலும் |
375 |
உம்மைப் பயங்காட்டி ஊளையிட்ட சத்தத்தால் செம்மைமுத்தம் கொள்ளவில்லை, சேர்ந்துமுத்தம் கொள்வீரே!' 'ஏஏஏ நான் இன்றைக் கேளனத்துக் காளானேன். நீயேன் இதையெல்லாம் நிச்சயமாய்ச் சொல்லவில்லை? ராமா யணமென்ற நலிவு தருங்கதை |
380 |
பூமியிலி ருப்பதைஇப் போதே அறிகின்றேன். நம்பத் தகாதவெலாம் நம்பவைத்துத் தங்கள்நலம் சம்பா திக்கின்ற சரித்திரக் காரர்களால் நாடு நலிகுவதை நான்இன்று கண்டுணர்ந்தேன். தோடு புனைந்த சுடர்க்கொடியே நன்றுசொன்னாய்! |
385 |
நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கைநதி. வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை, செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள், தின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள், இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில் |
390 |
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன? செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன? மூடப் பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம் ஓடுவ தென்றோ? உயர்வதென்றோ? நானறியேன். பாரடி மேற்றிசையில் சூரியன் பாய்கின்றான். |
395 |
சார்ந்த ஒளிதான் தகத்தகா யக்காட்சி! மாலைப் பொழுதும் வடிவழகு காட்டுதுபார்! சாலையிலோர் அன்னத்தைத் தன்பேடு தேடுதுபார். என்னடி சொல்கின்றாய் ஏடி இளவஞ்சி? என்நெஞ்சை உன்நெஞ்சம் ஆக்கிப்பார்' என்றுரைத்தான். |
400 |
தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போலே கன்னி யுடல்சிலிர்க்கக் 'காதலரே நாம்விரைவாய்ச் சாரல் அடைவோமே, காதலுக்குத் தக்கஇடம். சாரலும் தண்மாலை நாயகியைச் சாரக், குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த |
405 |
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாச முடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்கஉண்டு; பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும். |
410 |
அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே இன்பமும் நாமும் இனி!' * * * * * * * * * * இக்காலத்திற் பல துறைகளிலுஞ் சீர்திருத்தம் வேண்டிநிற்கும் நம் தமிழ் மக்கட்குப் புதுமுறையிற் பாடப்பட்டிருக்கும் பாரதிதாசனின் பாட்டுக்கள் |
415 |
கிளர்ச்சியினையும் மகிழ்ச்சியினையும் பயந்து சீர் திருத்தங்கள் பலவற்றிற்கு வழிகாட்டும். பாரதிதாசன் கவிதைகளில் உண்மை, இனிமை, அழகு இம்மூன்றும் அமைந்துள்ளன. அதனால்தான் அவரது கவிதைகள் படிப்போர் உள்ளத்துக்கு இன்பம் |
420 |
அளிக்கின்றன. இன்றைய தமிழன் அகராதியில் பாரதிதாசன் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சி என்றால் பாரதிதாசன் என்று பொருள். பாரதிதாசன் வேறு புரட்சி வேறு என்று புரட்சியிலே நாட்டமுடைய |
425 |
எந்தத் தமிழனும் கருதுவதில்லை. சாதிமதக் கொடுமைகளைத் தூள் தூளாக்க குருட்டுப்பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிய பகுத் தறிவை விரிவாக்க தமிழ்ப்பற்று பொங்கியெழ பெண் அடிமைத்தனம் நொறுங்க பொதுவாக நில, பண |
430 |
முதலைகளில் கொடுமையை உணர்த்த சுருங்கச் சொன்னால் தொழிலாளித்துவ சீர்திருத்தமான பாடல்களைத் தந்துள்ளார் பாரதிதாசன். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சஞ்சீவி பர்வதத்ததின் சாரல் - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - குப்பன், சஞ்சீவி, முத்தம், என்றாள், இளவஞ்சி, என்றான், பாரதிதாசன், கொண்டிருக்கும், பாகவதன், என்றுரைத்தாள், மக்கள், புரட்சி, என்றால், பர்வதத்தைத், கேட்டார்கள், இந்நேரம், சத்தம், வாழ்கின்றார், என்றுரைத்தான், அவ்விரண்டு, சொன்னாள், மூலிகையின், மூலிகையில், எவ்வாறு, தங்கள், என்னடி, அமெரிக்கன்