ஞானக்குறள் - 9. உள்ளுணர்வு
எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை உண்ணிலைமை பெற்ற துணர்வு. |
81 |
எண்ணமுடியாத ஊழிக் காலம் தவம் செய்து ஈசன் தனக்குள் இருக்கிறான் என்பதை உணர்வு கண்டுகொண்டது.
பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம். |
82 |
பல ஊழிக் காலம் அந்த அரனோடு பழகி, அருச்சித்து, நல்ல உணர்வுகளை நலமாக இருப்புக் கொள்ளும் பேற்றினைப் பெற்றுள்ளேன்.
எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே நண்ணப் படுமுணர்வு தான். |
83 |
நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அரிய தவத்தால்தான் இந்த உணர்வு கைகூடும்.
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால் பின்னைப் பெறுமுணர்வு தான். |
84 |
முற்பிறவியில் முயன்று பெற்ற தவத்தால் இப்பிறவியில் இந்த உணர்வு கைவரப் பெற்றுள்ளேன்.
காயக்கிலேச முணர்ந்த பயனன்றே ஓயா வுணர்வு பெறல். |
85 |
உடம்பாகிய உருப்பொருள் உணர்ந்ததன் பயன்தான் ஓயாத இந்த உணர்வு கைவரப் பெற்றுள்ளேன்.
பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால் கண்டங் குணர்வு பெறல். |
86 |
முந்தைய பிறவியின் பயனால் இந்தப் பிறவியில் தவம் செய்து இந்த உணர்வினைப் பெற்றுள்ளேன்.
பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை ஆராய்ந் துணர்வு பெறின். |
87 |
இடம் பெயராமல் செய்த தவத்தின் பயன்தான் மறுபிறப்பு இல்லாத பேறு. ஆராய்ந்து உணர்ந்தால் இது புலப்படும்.
ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே மோனத்தா லாய வுணர்வு. |
88 |
ஞான உணர்வை உடல் பெற்றுள்ளது. மோன உணர்வே அதன் பயன்.
ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான் நீதியாற் செய்த தவம். |
89 |
ஆதியோடு கலந்து ஒன்றாகும் அறிவினைப் பெறுவதுதான் முறையாகச் செய்யும் தவத்தின் பேறு.
காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால் கூடு முணர்வின் பயன். |
90 |
நாம் போகும் சுடுகாடும் சிவன் இருக்கும் மலையும் கருத்தில் கொண்டு தவம் செய்தால் உணர்வின் பயனைப் பெறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
9. உள்ளுணர்வு - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - வுணர்வு, பயனன்றே, தவத்தினால், துணர்வு