முல்லாவின் கதைகள் - மூளைக் கோளாறு
முல்லாவுக்கு மிகுந்த பண நெருக்கடியாக இருந்தபோது ஒரு செல்வந்தனிடம் ஆயிரம் காசுகள்
கடன் வாங்கி விட்டார்.
முல்லாவின் பொருளாதார நிலை அவர் எதிர் பார்த்த அளவுக்கு முன்னேறாததால் சொன்ன கெடுவுக்குள் பணத்தைத் திருப்பித்தர முடியவில்லை.
கடன் கொடுத்தவர் பல தடவை கடனைக் கேட்டும் இதோ தருகிறேன் அதோ தருகிறனே; என முல்லா சாக்குபோக்கு சொல்லிக் காலம் தள்ளினார்.
முல்லாவிடமிருந்து பணம் வாங்குவது கஷ்டம் என்று தெரிந்தவுடன் கடன் கொடுத்தவன் நீதிபதியிடம் முறையிட்டான்.
அந்தக் காலத்தில் நீதிமன்றத்துக்கு வாதியே தன் பொறுப்பில் பிரதிவாதியை அழைத்துவர வேண்டும் என்பது வழக்கம்.
அதனால்தான் கடன் கொடுத்தவர் முல்லாவின் வீட்டுக்கு வந்து நீதிமன்றத்துக்கு வருமாறு வற்புறுத்தினார்.
முல்லா கடன் கொடுத்தவரிடம் தந்திரமாகப் பேசத் தொடங்கினார்.
" ஐயா நீதிமன்றத்துக்கு வரும் அளவுக்கு என்னிடம் கண்ணியமான உடை இல்லை, என்னுடைய இப்போதைய பிச்சைக்காரக் கோலத்துடன் நீதிமன்றத்துக்குச் சென்றால் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளவனுக்கு ஏன் கடன் கொடுத்தாய் என்று நீதிபதி கேட்பார். உனக்கு எதிராகத்தான் தீர்ப்பு ஆகும். "
" அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என் எதிர்பார்க்கிறீர்?" என்று கடன் கொடுத்தவர் கேட்டார்.
" உம்மிடம் உள்ள விலை உயர்ந்த ஆடைகள் தலைப்பாகை, வைர மோதிரம் எல்லாவற்றையும் இரவலாகக் கொடும் இவற்றை அணிந்து கொண்டு நீதிமன்றம் வருகிறேன். நீதிமன்றத்திலிருந்து திரும்பிய உடனே உங்கள் துணிமணிகளைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் " என்றார் முல்லா.
கடன் கொடுத்தவர் அவ்வாறே தம்முடைய ஆடை அணிகளில் மிகவும் விலை உயர்ந்தவைகளை எல்லாம் கொடுத்தார்.
அணிகளை அணிந்து கொண்டு முல்லா நீதி மன்றம் சென்றார்.
" நீதிமன்றத்தில் நீதிபதி முல்லாவை நோக்கி இந்த மனிதரிடம் நீ ஆயிரம் பொற்காசுகள் கடனாகப் பெற்றீரா?" என்று கேட்டார்.
" மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே நான் இவரிடம் கடனாக எதையும் பெறவே இல்லை"
என்றார் முல்லா.
" அப்படியானால் இவர் தாம் உமக்கு ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கொடுத்ததாகக் கூறுவது பொய்யா?" என்று நீதிபதி கேட்டார்.
" தர்ம பிரபு, இந்த மனிதருக்கு ஒரு மாதிரியான வியாதி உண்டு. தெருவில் செல்லும் யாரைக் கண்டாலும் அவருக்குத் தாம் கடன் கொடுத்திருப்பதாகக் கூறுவார். சிலரைப் பார்த்தால் அவர் அணிந்திருக்கிற ஆடை அணிகள் எல்லாம் தம்முடையவை என்று சொல்வார் இப்படி ஒரு மோசமான மனநோய் இவருக்கு" என்றார் முல்லா.
" நீர் சொல்வதை எவ்வாறு நிரூபிக்க முடியும்?" என்று நீதிபதி வினவினார்.
" நான் நிரூபிக்கிறேன் தாங்கள் அருள் கூர்ந்து நான் அணிந்திருக்கிற ஆடை அணிகளை ஒவ்வொன்றாகக் கழட்டிக் காண்பித்து அது யாருடையது என வினவுங்கள் " என்று முல்லா கேட்டுக் கொண்டார்.
அதன் படியே நீதிபதி கேட்டார்.
" இவர் அணிந்திருக்கும் சட்டை யாருடையது" என்று நீதிபதியின் வினாவுக்கு " என்னுடைய சட்டை தான் என கடன் கொடுத்தவர் " சொன்னார்.
" இவருடைய தலைப்பாகை?" என நீதிபதி வினா எழுப்பினார்.
" என்னுடையதே" என்றார் கடன் கொடுத்தவர்.
" இவர் விரலில் இருக்கும் மோதிரம் கூட உம்முடையததானா?" என நீதிபதி கேட்டார்.
" ஆமாம் " என்றார் கடன் கொடுத்தவர்.
இந்த மனிதருக்கு சரியாகப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் என்ற நீதிபதி தீர்மானித்துக்
கொண்டார்.
" உமக்கு ஏதோ முளைக் கோளாறு இருக்கிறது. இந்த மனிதருடைய ஆடை அணிகள் எல்லாம் உம்முடையது என்கிறீர் நீர் உண்மையாகவே இவருக்குக் கடன் கொடுத்திருப்பீர் என்று தோன்றவில்லை. நீர் இவர் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டேன் " என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
வீட்டுக்கு வந்ததும் முல்லா கடன் கொடுத்தவரின் ஆடை அணிகளைத் திருப்பித் கொடுத்து விட்டார்.
பிறகு கடன் கொடுத்தவரை " நோக்கி ஐயா உம்மை நான் ஏமாற்றிவிட மாட்டேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் உங்கள் கடனை நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் " என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூளைக் கோளாறு - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - நீதிபதி, முல்லா, கொடுத்தவர், என்றார், கேட்டார், எல்லாம், கொடுத்து, வேண்டும், ஆயிரம், நீதிமன்றத்துக்கு, முல்லாவின்