கேள்வி எண் 4 - சட்டக்கேள்விகள் 100
4. கடன் வாங்கியவர் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்தால் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது?
ஐயா, சட்ட ஆலோசனை பகுதியை மிகவும் விரும்பி படித்து வருபவன் நான். எனக்கு ஒரு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். 2007 ஆம் ஆண்டு என் தந்தை ஒருவருக்கு ரூ.30,000 பணத்தைக் கடன் கொடுத்தார். 2 வட்டி என்று சொல்லி வெற்று Promisory Note ல் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார். நிலப்பட்டா ஒன்றையும் வாங்கி வைத்தி ருக்கிறார். கடனைத் திருப்பி செலுத்த பலமுறை கேட்டும் கடன் வாங்கியவர் இதுவரை கொடுக்கவில்லை. கடனை வாங்க எவ்விதம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறவும். நன்றி அய்யா.
- V .கௌசல்யா, கும்பகோணம்.
பதில் :
பொதுவாக ஒருவருக்கு கடன் தந்துள்ளீர்கள் என்றால் அதனை மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப பெறவேண்டும். லிமிடேஷன் சட்டப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் எத்தனை ஆண்டுக்குள் வழக்கு தொடரவேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி கடனைத் திரும்பப் பெற அல்லது அவர் கடனைத் திரும்ப செலுத்தவில்லை என அவர்மீது வழக்கு தொடர மூன்று ஆண்டுகள்தான் கால அவகாசம். ஆனால் இந்த மூன்று ஆண்டுகள் எப்போது தொடங்கு கிறது என்பதற்கு சில விதிகள் உண்டு.
உங்கள் தந்தையிடம் அவர் கடன் பெற்றது 25.05.2007 என வைத்துக் கொள்வோம். அதன்பின் அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஒருமுறை வட்டியோ அல்லது அசலில் சிறு தொகையோ செலுத்தியிருந்தால் அப்படி அவர் கடைசியாய் பணம் செலுத்திய நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் துவங்கும்.
அதைப்போலவே உங்கள் தந்தை அவரை பணம் திரும்பத் தரச்சொல்லி கடிதம் எழுதி அதற்கு அவர் இந்த தேதியில் பணம் திரும்ப தருகிறேன் என பதில் கடிதம் தந்திருந்தால் அன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் காலஅவகாசம் துவங்கும். இதற்கு “Acknowledging the Debt” என்று சொல்வார்கள் (உங்கள் தந்தை எழுதும் கடிதம் இங்கு முக்கியமில்லை. கடன் பெற்றவர் எழுதும் பதில் கடிதமே முக்கியம்)
நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது அவர் எந்த பணமும் தரவில்லை அல்லது கடனை ஒப்புக்கொண்டு சமீபத்தில் எந்த கடிதமும் தரவில்லை என்பது தெரிகிறது. சிவில் முறையில் நீங்கள் வழக்கு தொடர வேண்டுமெனில், அவரது கடனை உறுதி செய்யும்படி அவரிடம் தற்போதைய தேதியில் ஒரு கடிதமோ, அல்லது அவர் கடனுக்கு சிறு வட்டியோ தற்போது வாங்கினால் மட்டுமே நடக்கும். இவை முடியாத பட்சத்தில் சிவில் வழக்கு தொடருவது கடினம். ஆனால் உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றி விட்டார் என அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும். இதற்காக அவர் மீது ஒரு வக்கீல் நோட்டிசு அனுப்பினாலே அவர் உடனே இறங்கி வர வாய்ப்புண்டு.
நீங்கள் உடனே ஒரு வழக்குரைஞரை ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அவர், மூன்று, கடன், வழக்கு, பணம், அல்லது, திரும்ப, உங்கள், நீங்கள், கடிதம், ஆண்டுகள், தொடர, பதில், நடவடிக்கை, தந்தை, கடனைத், கடனை, தேதியில், எழுதும், தரவில்லை, உடனே, மீது, சிவில், சட்ட, எந்த, சிறு, வாங்கியவர், வாங்கி, ஆண்டுக்குள், அவகாசம், ஒருவருக்கு, ஆலோசனை, வட்டியோ, துவங்கும்