வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 88
தாங்கள் இவ்விதம் தாக்கப்படுவோமெனப் பின்னால் நின்ற அசுர சேனை எதிர்பார்க்கவில்லை. ஆகையால், செம்பட்டைத் தலைவர்களின் நீண்ட ஈட்டிக்கும், கனத்த வாளுக்கும் முன்பு அவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் ஆரியர்கள், அவர்களை முறியடித்து விரட்டி விடுவதோடு திருப்தியடையவில்லை. ஆரியர்கள் மீது கண் வைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை அந்தக் கறுப்பு அசுரர்கள் உணரும்படி செய்ய விரும்பினார்கள். முறிபட்டு ஓடும் அசுரப் படைகளைத் துரத்திக் கொண்டே, புருதானன் புஷ்கலாவதி நகரத்தை அடைந்தான். அசுரப் படைகளைப் போலவே, நகராதிபனும் ஆரியர்களுடைய இந்தத் தாக்கு தலை எதிர்பார்க்கவில்லை. ஆகவே, தங்களுடைய முழுச்சக்தியையும் உபயோகிப்பதற்கு அசுரர்களுக்குச் சந்தர்ப்பம் இல்லாமற்போய்விட்டது! புஷ்கலாவதிக் கோட்டை சுலபமாக ஆரியர்கள் கைவசப்பட்டதோடு, நகராதிபதியும் பிடிபட்டான். அசுரர்கள் மீது இவர்களுக்குப் பகைமை எண்ணம்
வேரூன்றியிருந்ததால், கண்ட கண்ட அசுரர்களை எல்லாம் இரக்கமின்றி வெட்டிக் குவித்தார்கள். நகராதிபனை நகரச் சந்தியில் நிறுத்தி, நகரப் பிரஜைகளுக்கு முன்னால் அங்கம் அங்கமாக வதை செய்தார்கள். ஆனால் குழந்தைகள், பெண்கள், வியாபாரிகள் முதலியவர்களைக் கொலை செய்யாது விடுத்தனர். அக்காலத்தில் அடிமைப்படுத்தும் வழக்கம் இருந்திருந்தால், அசுரர்களை இவ்வளவு அதிக அளவில் கொன்று குவித்திருக்கமாட்டார்கள். புஷ்கலாவதி நகரத்தின் பெரும்பாகத்தைத் தீக்கு இரையாக்கினர். இதுவே அசுரர்களுடைய கோட்டையின் முதலாவது அழிவு.
புருதானன் தன் ஆட்களுடன் திரும்பி, பாதுகாப்பிற்கு நிறுத்தப் பட்டிருந்தவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு தங்கள் தேசத்தை நோக்கிச் சென்றான்.
அன்றுதான், ஆரியர்களுக்கும் அசுரர்களுக்கும் (தேவர் -அசுரர்) இடையில் யுத்த விதையும் ஊன்றப்பட்டது.
பல வருஷங்கள் வரை புஷ்கலாவதி நகரின் வியாபாரம் சீரழிந்து போயிற்று. ஆரியர்கள் அசுரர்களோடு வியாபாரம் செய்ய மறுத்தனர். ஆனால், தாமிரத்தையும், பித்தளையையும் இவர்கள் எவ்வளவு காலத்திற்குப் பகிஷ்கரிக்க முடியும்?
____________________________________________________
*இன்றைக்கு நூற்று அறுபது தலைமுறைகளுக்கு முன்னே ஆரியர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம்-தேவாசுர யுத்தம் மூண்டதின் கதை. மலை வாசிகளான ஆரியர்களிடம் இன்னும் அடிமை வழக்கம் புகவில்லை.
தாமிரம், செம்பு ஆயுதங்களின் உபயோகம் மிக அதிகரித்துவிட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரியர்கள், புஷ்கலாவதி, ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்