முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 312
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 312
“திவான் சாகிப்பிற்காகச் சுரைக்காய்கள் பிடுங்கிக் கொண்டிருக்கிறேன், பார்க்கவில்லையா?” சேவகன் அலட்சியமாகப் பதில் சொன்னான்.
“உன் கால், கை தப்பிப் பிழைக்க வேண்டுமானால் பேசாமல் கீழே
இறங்கி வா.”
“கிராம ஜமீன்தாரின் சேவகம், ஞாபகமிருக்கட்டும்.”
“எல்லாம் தெரியும். சுரைக்காயை மரியாதையாக அங்கே விட்டு விட்டு இறங்கி வா.”
சேவகன் பேசாமல் இறங்கிப் போய்விட்டான். இதைக் கேட்ட திவான், கோபத்தை அப்பொழுது அடக்கிக் கொண்டான். மாசி மாதம் ஜமீன்தார் வரும் போது தீர்த்துக் கட்ட வேண்டிய நம்பரில் ஒன்றைச் சேர்த்துக் கொண்டான். ஜமீன்தார் வந்த அன்று மாலை பழைய அதே சேவகன் ரேக்காவின் வீட்டிற்கு வந்து அதிகாரத்தோடு,
“நாளையிலிருந்து தினந்தோறும் அதிகாலையில் எஜமானருக்காக இரண்டு சேர் பால் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.”
“எங்களிடம் எருமையோ பசுவோ கிடையாதே, எங்கிருந்து பால் கொண்டு வருவோம்?”
“எங்கிருந்து கொண்டு வருவாயோ, எஜமானரின் உத்தரவு” என்று கூறிப் போய்விட்டான்.
ரேக்காவிடம் பசுவோ, எருமையோ கிடையாதென்பது திவானுக்குத் தெரியும். ஆனால் ரேக்காவை ஒழுங்குபடுத்த வேண்டுமென்பதுதானே அவன் நோக்கம். மாலையில் ஜமீன்தாரிடம் ரேக்காவைப் பற்றிச் சரியாக வத்தி வைத்தான். அவனால்தான் கிராமம் முழுவதும் கெட்டு விடுகிறதென்றும் சொன்னான். இரவிலேயே ஜமீன்தாரின் மனதைச் சரிப்படுத்திவிட்டான்.
காலையில் ரேக்காவிடமிருந்து பால் வராமற் போகவே சேவகன் போனான். தன்னிடம் எருமை, பசு எதுவும் கிடையாதென்ற கதையையே மறுபடியும் ஒப்புவித்தான். இதைக் கேட்ட ஜமீன்தார், ஐந்து குண்டர்களான சிப்பாய்களை அனுப்பி “போங்கள். அந்த அயோக்கியப் பயலின் மனைவியின் பாலைக் கறந்து கொண்டு வாருங்கள்” என்று உத்தரவிட்டான்.
கிராம ஜனங்களில் பலர் அங்கே இருந்தார்கள். சிப்பாய்கள் வருவதைப் பார்த்து அவர்கள் ரேக்காவைப் பிடித்துப் போகத்தான் வருகிறார்கள் என்று கருதினார்கள். ஆனால் சிப்பாய்கள் ரேக்காவிடம் ஒன்றும் பேசாமல் அவனைத் தூணோடு சேர்த்துக் கட்டி விட்டார்கள். உடனே ஒருவன் உள்ளே போய் மங்கரியைப் பிடித்து வந்தான். கையாலாகாத ரேக்கா தன் ரத்தம் தெரிக்கும் கண்களால் பார்த்துக் கொண்டிருக்க, அழுது ஓலமிடும் மங்கரியின் மார்பைப் பிடித்து கிளாஸிலே சில துளிப் பாலைக் கறந்து கொண்டு, அவளையும் ரேக்காவையும் அப்படியே விட்டு விட்டுப் போய் விட்டார்கள். வெட்கமும், அவமானமும் தாங்க முடியாமல், தலை கவிழ்ந்து உட்கார்ந்து விட்டாள்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 310 | 311 | 312 | 313 | 314 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொண்டு, சேவகன், என்று, பால், ஜமீன்தார், பேசாமல், விட்டு - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்