முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 283
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 283
வெண்மை நிறம் அதிகரித்துத் தோன்றிற்று. அதைச் சுற்றிப் பச்சைக் கம்பளம் விரித்திருந்தது போன்ற பசும் புற்றரையின் மத்தியிலே கோபுரம் போன்று உயர்ந்த மரங்கள் வரிசை வரிசையாக நிற்கும் காட்சி மிக அழகாயிருந்தது. முக்கியமாக இந்த வசந்த காலத்தின் மத்தியான வேளையிலே, மனத்திற்கு மகிழ்ச்சியளித்துக் கொண்டிருந்தது. கொடி வீடுகளும் செயற்கை நீர் ஊற்றுக்களும் எங்கும் நிறைந்திருந்தன. இன்று வசந்தோற்சவத்திற்காக, இந்த அரச உத்தியானவனம் யுவர்களுக்கும் யுவதிகளுக்கும் தடையின்றித் திறந்து விடப்பட்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சி நிறைந்த கும்பல் சுவர்க்க வாசிகளைப் போல் எங்கும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தத் தோட்டத்தின் ஒரு மூலையிலே, குளத்திற்கு அதிக தூரத்தில் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டிருந்த காவல் வீட்டிற்கு வெளியே நான்கு மனிதர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நால்வரும் ஒரே மாதிரி சிறிது முன்னால் நீண்ட தலைப்பாகையும், முழங்கால்வரை தொங்கும் அழகிய வேலைப்பாடுகள் செய்த அங்கியும் வெள்ளை நிற இடைக் கச்சையும் அணிந்திருக்கிறார்கள். நால்வருடைய மீசையும் பெரும்பகுதி நரைத்துவிட்டது. அவர்கள் சிறிது நேரம் அங்கே நின்று, தோட்டத்தில் நிகழ்வதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பால் காவல் கூடத்திலே விரிக்கப்பட்டிருந்த மெத்தைகளிலே போய் உட்கார்ந்தார்கள். எங்கும் நிசப்தம் நிலவியது. இந்த நான்கு கிழவர்களையும் தவிர, அங்கு வேறு யாரும் இல்லை. மௌனத்தைக்
கலைத்து ஒருவர் பேசத் தொடங்கினார்.
“பாதுஷா ஸலாமத்...”
“என்ன பஜல்! இப்பொழுதும் நாம் தர்பாரிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்? மனிதர்கள் எந்த இடத்திலும் சாதாரண மனிதர்களாக நடந்து கொள்ள முடியாதா?”
“மறந்து போய்விடுகிறது...”
“ஜலால் அல்லது அக்பர் என்று கூப்பிடு, இல்லாவிட்டால் நண்பா என்று சொல்.”
“எவ்வளவு கஷ்டமான காரியம் நண்ப ஜலால், நாம் இரண்டு வித வாழ்க்கையை நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.”
“இரண்டுவிதமல்ல! நான்குவித வாழ்க்கை என்று சொல்லு பஜல்.”
“பீரு! நான் உன்னைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நீ எந்த நேரத்திலும், எந்த வாழ்க்கைக்கும் தயாராய் இருக்கிறாய். நாங்கள் ஓர் உலகத்திலிருந்து மற்றோர் உலகத்திற்கு வந்தால் எங்கள் ஞாபக சக்தியைச் சரிப்படுத்துவதற்கே நீண்ட நேரம் ஆகிவிடுகிறது. என்ன தோடு! நான் சொல்வது சரிதானே?”
“ஆம்; எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது பஜல்! இந்தப் பீருவுக்கு இவ்வளவு பெரிய மூளை எங்கிருந்து கிடைத்தது? அதற்காக இவன் என்ன செய்தான்?”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 281 | 282 | 283 | 284 | 285 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, எந்த, பஜல், எங்கும், இந்த - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்