முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 214
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 214
முப்பது பிராமண மாணவர்களும், நாலு மாணவிகளும் இருந்தார்கள். அவர்களில் யாருடைய நிறமும் எங்களைப் போல வெண்மையாக இல்லை. யாரும் எங்களளவு வளர்ந் தவர்கள் இல்லை. அப்படி இருந்துங்கூட, எங்களை அவர்கள் குறைவாக மதிக்கிறார்கள். அன்று பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்தபொழுது, என் முகம் கவலையால் வாடி இருந்தது. அதைப் பார்த்த என் தாய் எனது கன்னங்களிலே முத்தமிட்டு,
“மகனே! ஏன் உன் முகம் இன்று வாட்டமடைந்திருக்கிறது” என்று கேட்டாள். நான் தட்டிக்கழித்துவிட முயன்றேன். ஆனால் அவள் ரொம்பவும் வற்புறுத்திய பிறகு,
“அம்மா! நம்முடைய குடும்பத்தைப் பற்றி என்னமோ ஒரு விஷயம் இருக்கிறது. கிராமத்தின் மற்ற ஜனங்கள் நம்மைப் பிராமணர்கள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்!”
“நாம் வெளிநாட்டிலிருந்து வந்த பிராமணர்கள் மகனே! அதனால் தான் அவர்கள் அப்படி நினைக்கிறார்கள்!”
“பிராமணர்கள் மட்டுமல்ல அம்மா! பிராமணர் அல்லாதாருங் கூட நம்மைப் பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.”
“அவர்களும் இந்தப் பிராமணர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தான்.”
“நாம் வேள்விகளும் செய்வதில்லை. மற்ற பிராமணர்கள் புரோகிதம் செய்கிறார்கள். பிராமண போஜனத்திற்குச் செல்கிறார்கள். நாம் அவைகளை யெல்லாம் செய்வதில்லை. மேலும், பிராமணர்கள் தங்கள் பந்தியிலே உட்கார்ந்து சாப்பிட நம்மை அனுமதிப்பதில்லை. இவைகளுக்கெல்லாம் காரணம் என்ன? அம்மா! உனக்கேதாவது தெரியுமானால் சொல்லேன்.”
என்னைச் சமாதானப்படுத்தத் தாயார் ஏதேதோ சொன்னாள். அவை எதுவும் என்னைத் திருப்திப்படுத்தவில்லை. நான் இந்த நினைவுகளிலே உழன்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, எனது தோழ மாணவர்
களான நாகர்கள் என்னிடத்தில் அதிக அனுதாபம் காட்டினார்கள். தாக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் அனுதாபம் காட்டிக்கொள்வது இயற்கைதானே!”
2
காலம் ஓடிற்று. எனக்குப் பதின்மூன்று வயது ஆகி விட்டது; எனது பள்ளிக்கூடப் படிப்பு முடியும் நிலையை அடைந்துவிட்டது. எங்களது வேதமான ருக்வேதம் ஏரேதய பிரமாணம், இலக்கணம், நிருத்தம் இவைகளோடு, இன்னும் சில காவியங்களையும் படித்து முடித்தேன். குருஜியின் அன்பு அதிகரித்துக் கொண்டே போயிற்று. அவர் மகள் வித்யா என்னைவிட நான்கு வருடம் இளையவள். அவளுக்கு அடிக்கடி நான் பாடம் சொல்லிக் கொடுப்பதுண்டு. குருதேவரும் அவர் மனைவியும் என்னிடம் நடந்து கொள்வதைப் பார்த்து அவளும் எனக்கு அதிக மரியாதை செலுத்துவாள். குருதேவரின் குடும்பத்தினர், எப்பொழுதும் என்னைக் குறைவாய் நடத்தியதே இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 212 | 213 | 214 | 215 | 216 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிராமணர்கள், நான், என்று, எனது, இல்லை - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்