முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 165
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 165
கட்டப்பட்டிருந்தன. அக்கம் பக்கத்திலுள்ள பூப் பிரதேசத்தைப் பார்க்கும்போது, இந்தப் பிரயாண விடுதிகளிலே வசிப்பதற்குத் தேவையான வசதிகள் கிடைக்கும் என்று நம்பவே முடியாது. இந்தப் பாலைவனத்திலே, இவ்வளவு பொருள்களும் எங்கிருந்து வந்தன என்று நமக்கு ஆச்சரியமாகவே இருக்கும். பிரயாண விடுதிகள் யாவும் ஒரே மாதிரியானவை அல்ல. சில அரசாங்க அதிகாரிகளும் சேனை வீரர்களும் தங்குவதற்காக உள்ளவை. சில வியாபாரிகள் தங்குவதற்காக, ஒவ்வொரு இடத்திலும், அரசனும் அவனது பரிவாரமும் தங்கும் மாளிகை குறைந்தது ஒன்றாவது இருக்கும். இன்று அந்தத் தங்கும் இடத்தின் அரசமாளிகையில் யாரோ தங்கி இருக்கிறார்கள். குதிரை லாயத்தில் குதிரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அடிமைகளும் வேலைக்காரர்களும், இங்கும் அங்கும் ஓடியாடித் திரிந்தார்கள். ஆனால், அவர்களுடைய முகங்களிலே கவலைக் குறி காணப்பட்டது. இவ்வளவு மனிதர்களின் புழக்கமிருந்தும், அந்த அரச மாளிகையில் ஆச்சரியப்படக்கூடிய மௌனம் குடிகொண்டிருந்தது. அரச மாளிகைக்குள்ளிருந்து பரபரப்போடு வெளியே வந்த மூன்று அரசாங்க உத்தியோகஸ்தர்கள், சாதாரண வியாபாரிகள் தங்கும் விடுதிக்குள் நுழைந்தனர். அவர்களுடைய விலை உயர்ந்த ஆடைகளையும் கம்பீரத்தையும் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் பயத்தோடும், மரியாதையோடும் எழுந்து நின்றனர். அவர்களிடம் அங்கு யாராவது வைத்தியர்கள் இருக்கிறார்களா என்று அந்த
உத்தியோகஸ்தர்கள் விசாரித்தார்கள். முடிவில் மற்றொரு பிராயண விடுதியில் ஒரு ஹிந்து வைத்தியர் தங்கி இருப்பதாகத் தெரியவந்தது. அந்தப் பிரதேசத்தில், மழை பெய்வது மிகவும் அபூர்வம். மேலும், மழைக்காலமும் எப்பொழுதோ முடிந்துவிட்டது. ஆப்பிள், திராட்சை, தர்பூஜா முதலிய விலை குறைந்த பழங்கள், அந்த விடுதிகளிலே விற்பனையாகிக் கொண்டிருந்தன. அரசு ஊழியர்கள் மூவரும் ஹிந்து வைத்தியர் இருக்கும் இடத்திற்குச் சென்ற பொழுது, இவர் ஒரு பெரிய தர்பூஜா பழத்தை நறுக்கித் தின்று கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில், அவரைப் போலவே பிச்சைக்காரர்கள் மாதிரி உடை உடுத்திக் கொண்டிருந்த ஈரானியர்கள் பலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னாலும் தர்பூஜாப் பழங்கள் இருந்தன.
அரசு ஊழியர்களைப் பார்த்ததும், அந்தப் பிச்சைக்காரர்கள் பயந்து நாலா பக்கமும் ஓடிவிட்டனர் அங்கேயே நின்றுகொண்டிருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, “சுவாமி! இவர்தான் ஹிந்து வைத்தியர்” என்று அவர்கள் கூட வந்தவன் சொன்னான்.
வைத்தியனுடைய கிழிந்த துணியைப் பார்த்த அவர்களுக்கு முதலில் அருவருப்புத் தோன்றியது. ஆனால், அவனுடைய முகத்தைப் பார்த்தபொழுது அந்த முகத்திற்கும் கந்தல் துணிகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரிந்தது. அந்த முகத்திலே, பயத்தின் சின்னமோ ஏழ்மையின் ரேகையோ காணப்படவில்லை. அந்த நீல நிறக் கண்களின் ஒளி, உத்தியோகஸ்தர்களின் மனத்திலே ஒரு மரியாதையை உண்டாக்கிற்று. அவர்களுடைய நெற்றிச்
சுருக்கங்கள் மறைந்துவிட்டன. மரியாதை தொனிக்கும் குரலில்,
“நீங்கள் தான் வைத்தியரா?” என்று கேட்டார்கள்.
“ஆம்.”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 163 | 164 | 165 | 166 | 167 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்த, என்று, ஹிந்து, தங்கும், இருக்கும், அவர்களுடைய - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்