சத்ய சோதனை - பக்கம் 146
இதற்குள் இருட்டிவிட்டது. வீட்டுக்குச் சென்று சாப்பிட்டேன். என் அறைக்குப் போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து சிந்திக்கலானேன். உடனே செய்தாக வேண்டிய வேலை எதுவும் எனக்கு இல்லை. அதைப்பற்றி அப்துல்லா சேத்துக்கு அறிவித்தேன். என்னிடம் ஸ்ரீ பேக்கர் கொண்டிருக்கும் சிரத்தையின் பொருள் என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்தேன்: ‘அவருடைக சகாக்களினால் நான் அடையப்போகும் லாபம் என்ன? கிறிஸ்தவ சமய ஆராய்ச்சியை நான் எந்த அளவுக்கு மேற்கொள்ளுவது? ஹிந்து சமயத்தைப்பற்றிய நூல்களைப் பெறுவது எப்படி? என்னுடைய மதத்தைப்பற்றி முற்றும் தெரிந்துகொள்ளாமல் கிறிஸ்தவத்தைச் சரியான வகையில் நான் எவ்விதம் புரிந்துகொள்ள முடியும்? ஒரே ஒரு முடிவுக்கே நான் வரமுடிந்தது; எனக்குக் கிடைப்பதை எல்லாம் விருப்பு வெறுப்பின்றி நான் படிக்க வேண்டும். கடவுள் காட்டும் வழியை அனுசரித்து, ஸ்ரீ பேக்கரின் கோஷ்டியினருடன் பழகவேண்டும். என் மதத்தைப்பற்றி முற்றும் தெரிந்து கொள்ளுவதற்கு முன்னால், மற்றொரு மதத்தில் சேருவதைப்பற்றி நான் எண்ணவும் கூடாது.’
இவ்விதம் சிந்தித்தவாறே தூக்கத்தில் ஆழ்ந்தேன்.
11. கிறிஸ்தவர்களுடன் தொடர்பு |
மறுநாள் ஒரு மணிக்கு ஸ்ரீ பேக்கரின் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே கன்னி ஹாரிஸ், கன்னி காப், ஸ்ரீ கோட்ஸ் முதலானவர்களுக்கு அவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். பிரார்த்தனை செய்வதற்காக எல்லோரும் முழந்தாள் இட்டனர். நானும் அவ்வாறே செய்தேன். ஒவ்வொருவரின் விருப்பத்துக்கும் ஏற்றவாறு, பல காரியங்களை முடித்தருள வேண்டுமென்று கடவுளைத் துதிப்பதே பிரார்த்தனை. அன்றைய தினம் அமைதியாகக் கழிய வேண்டும் என்பதும், உள்ளத்தின் கதவுகளை ஆண்டவன் திறக்க வேண்டும் என்பதும் சாதாரணமான பிரார்த்தனைகள். என்னுடைய க்ஷேமத்திற்கென்று பின்வருமாறு ஒரு பிரார்த்தனையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது: “ஆண்டவனே! எங்கள் மத்தியில் வந்திருக்கும் புதிய சகோதரருக்கு வழிகாட்டி அருளும். ஆண்டவனே! எங்களுக்கு நீர் அளித்திருக்கும் சாந்தியை அவருக்கும் அளியும். எங்களைக் காப்பாற்றியிருக்கும் ஏசுநாதர் அவரையும் காப்பாராக. ஏசுவின் பெயராலேயே இவ்வளவும் வேண்டுகிறோம்.” இந்தக் கூட்டங்களில் பிரார்த்தனைக் கீதங்கள் பாடுவதோ, வேறுவிதச் சங்கீதமோ இல்லை. ஒவ்வொரு நாளும் விசேஷமாக ஏதாவது ஒன்றைக் கோரிப் பிரார்த்திப்போம். பிறகு கலைந்துவிடுவோம். அது மத்தியானச் சாப்பாட்டு வேளையாகையால் அவரவர்கள் சாப்பிடப் போய்விடுவார்கள். பிரார்த்தனை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 144 | 145 | 146 | 147 | 148 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், ஸ்ரீ, பிரார்த்தனை, வேண்டும் - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்