முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » மனிதனுக்கு தேவையான யோகம் எது?
அர்த்தமுள்ள இந்துமதம் - மனிதனுக்கு தேவையான யோகம் எது?
`கருமத்தைச் செய்; பலனை எதிர்பார்க்காதே’ என்பதே பகவான் வாக்கு.
இதை ஆயிரக்கணக்கான தடவைகள் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
இதன் பொருள் என்ன?
`அலுவலகத்தில் வேலை பார்; சம்பளம் வாங்காதே’ என்பதா?
சாதாரண மனிதனுக்கு அப்படித்தான் தோன்றும்.
ஆனால், உண்மை அதுவல்ல.
உனக்கென்று சில சுய தர்மங்களை வகுத்துக் கொள்.
`பத்துப் பேருக்கு உதவுகிறது’ என்று வைத்துக் கொண்டால், எந்தப் பத்துப் பேரிடமிருந்து எதையும் நீ எதிர்பார்க்க முடியாதோ, அவர்களுக்கு உதவு.
`கருமம்’ என்பது கடமை.
`மகனைப் படிக்க வைத்துப் பட்டம் பெற வைத்து, உத்தியோகமும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்’ என்று மட்டும் நினை.
`அப்படிக் கொடுத்து விட்டால், அவன் சம்பளத்தில் சாப்பிடலாமே’ என்று நினைக்காதே.
எங்கே நீ பலனை எதிர்பார்க்கலாமோ, அங்கே எதிர்பார்க்கலாம்.
மனைவிக்கு நகை வாங்கிக் கொடுப்பதும், கருமம்தான்; அப்படி வாங்கிக் கொடுத்தால், `அவள் நம்மிடம் பிரியமாக இருப்பாள்’ என்ற பலனும் அதில் அடங்கி இருக்கிறது.
அரசியல் ரீதியாகச் சொன்னால், ஒரு கருமத்தின் பலன் இருந்தும், இல்லாமலும் இருக்கிற இரண்டு நிலைகள் உண்டு.
உதாரணம்: வங்காள தேச விடுதலை.
அந்த விடுதலையின் மூலம் ஒரு அரக்கனிடமிருந்து வங்காள தேச மக்கள் விடுதலை பெற்றார்கள்.
நாம் அந்த நாட்டைக் கைப்பற்றவில்லை.
ஆனால், ஒரு கோடி அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
ஒரு வகையில் நமக்குப் பலன் இருந்தது; ஒரு வகையில் பயனில்லை.
நாம் எதிர்பார்த்த பலன், அகதிகளை அனுப்புவது.
நாம் விரும்பாத பலன் நாட்டைக் கைப்பற்றுவது.
தச்சன், அடிக்கின்ற ஆணிக்கு கூலி வாங்காமல் இருக்க முடியாது.
கொல்லன், அடிக்கின்ற இரும்புக்குக் கூலி வாங்கித்தான் தீர வேண்டும்.
பகவான் இவர்களைத்தான், பலனற்ற கருமம் செய்யச் சொல்லுகிறான் என்று பலர் தப்பாகக் கணக்கிடுகிறார்கள்.
உண்மை அதுவல்ல.
`கருமம்’ என்ற வார்த்தையைக் `கடமை’ என்றே அவன் கொள்கிறான்.
`தருமம்’ என்பது என்ன?
பலன் கருதாத உதவி.
`கருமம்’ என்பது பலன் கருதாத கடமை.
எந்தப் பலனும் கருதக் கூடாது.
`மகாராஜன் நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்துவார்கள், பெற்றுக் கொண்டவர்கள். அந்தப் பலனையும் எதிர்பார்க்கக் கூடாது.
சிலர் பெற்றுக் கொண்டே திட்டுவார்கள்; அதைப் பற்றியும் கவலைப் படக்கூடாது.
`அடப்பாவி! நான் எவ்வளவு உதவி செய்திருக்கிறேன். என்னைப் போய்த் திட்டுக்கிறானே’ என்று சொல்லக் கூடாது.
உண்மையில் அதுவும் ஒரு வகை யோகம்தான்!
`நன்றியை எதிர் பாராதே.’
`நன்றி கெட்டவனை மன்னித்துவிடு.’
`எந்தச் சூழ்நிலையிலும் நமது கடமையைச் செய்து விட்டோம்’ என்று திருப்தியடையுங்கள்!
- இதுவே யோகம்.
இந்த இலக்கணத்தின்படி, எத்தனை பேரை இன்று நாம் சந்திக்க முடியும்?
தருமச் சொத்து என்று வைத்து, அதிலேயும் கொள்ளையடிப்பவர்கள் தான் அதிகம்.
ஆனால், கண்ணை மூடிக்கொண்டு கடமையைச் செய்வதுதான் யோகம்.
இன்றைய யோகிகளில் சிலர் காரியத்தைச் செய்து கொடுத்துவிட்டு – தாங்கள் எதிர்பார்க்காவிட்டாலும் வருகின்ற பலனைப் பெற்றுக் கொள்கிறார்கள்!
அதுவே, நேரான யோகத்துக்குப் புறம்பானது.
லெளகீக வாழ்வில் ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய தர்மம் இது.
நல்ல அடை மழை, `தனது வீடு ஒழுகுகிறது’ என்று நாலு பேர் கதவைத் தட்டினால், அவர்கள் படுப்பதற்குக் கூடச் சில பேர் இடங் கொடுப்பதில்லை.
ஓர் இந்து, `தங்கள் வீடு, அகதிகளும், அதிதிகளும் ஆபத்தில் தங்குவதற்காக’ என்று கருத வேண்டும்.
`தன் உணவு பங்கிட்டுச் சாப்பிடவே!’ என்று எண்ண வேண்டும்.
`மனைவியைத் தவிர, மற்ற உடமைகள் தன்னுடையனவல்ல!’ என்று எண்ண வேண்டும்.
`செல்வம் செல்லக்கூடியது’-
`தங்கம் தங்காதது’-
தங்கக் கூடியது, நல்வினைப் பயன் ஒன்று மட்டுமே.
உலகத்தில் அளவுக்கு மீறி வாழ்க்கையை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.
அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லி விடுவதில் தவறில்லை என்று எழுதுகிறேன்.
ஸ்ரீஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் சொன்னபடி, வயதாகும் போது சிந்தனையில்தான் திருப்தியடைய வேண்டியிருக்கிறது.
முன்பெல்லாம் ரத்தத்தில் ஒரு அதீதமான உணர்ச்சி இருந்தது.
எந்த ஹோட்டலைப் பார்த்தாலும் பசி எடுத்தது.
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆசை வந்தது.
பெரும்பாலான நேரங்கள் பெண்ணைப் பற்றியும், சாப்பாட்டைப் பற்றியுமே பேசுவேன்.
கருங்குரங்கை எப்படிச் சமைப்பது என்பதில் இருந்து, பச்சைப் பாம்பு சூப் வைப்பது வரை நாக்கில் ஜலம் சொட்டச் சொட்டப் பேசுவேன்.
சிறு வயதில் நான் சாப்பிடும்போது, நான் சாப்பிடச் சாப்பிட முன்னால் போடப்படும் எலும்புகளை அள்ளி அள்ளி என் தாயார் வெளியே கொண்டு போய்ப் போடுவார்கள்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு வரையில், என் மனைவியும் அப்படித்தான் செய்தாள்.
காரணம் எலும்புகள் மலைபோல், குவிந்து கிடந்தால் திருஷ்டி படும் என்பார்கள்.
மலேஷியாவில் சீன ஹோட்டல்களுக்குள் நுழைந்து விட்டால், நான் சாப்பிடும் சாப்பாட்டை யாரும் சாப்பிட முடியாது.
ஓரிடத்தில் நான் சாப்பிட்டு முடித்த போது ஒருவர், `இதென்ன மனிதன் சாப்பிடுகிற சாப்பாடா’ என்றே கேட்டு விட்டார்.
சுமார் இருபது வருஷங்களாக எனது இரவுச் சாப்பாடு, இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான்.
இடையிடையே நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பத்து மணிக்குச் சாப்பிட்டிருக்கிறேன்.
அதுவும் சுமார் இரண்டு மாத காலம்தான்.
சாதாரணமாகவே பன்னிரண்டு மணிக்குச் சாப்பிடுவது தான் வழக்கம்.
ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரை குடித்துக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பேன்.
சிந்தனை, வெள்ளம் போல் கரை புரண்டு ஓடும்.
பெண்களைப் பற்றிய பாடலே தோன்றும்.
உலகத்தை அனுபவித்து முடித்துவிட வேண்டும் போலிருக்கும்.
அடிக்கடி எழுந்து கண்ணாடி பார்ப்பேன்.
இரத்தமெங்கும் ஆனந்தம் கொப்புளித்துக் கொண்டிருக்கும்.
அப்போதும் உடம்புக்கு நோய் வரும்.
எத்தனை மாத்திரைகள் உண்டோ, அத்தனையும் சாப்பிடுவேன்.
அந்த நாட்களில், யார் யாரைச் சந்தித்தோம் என்பது கூடப் பாதி மறந்து போய்விட்டது. அவ்வளவு நிதானமின்றி ஆடி இருக்கிறேன்!
எவ்வளவு ஆடினாலும், எழுத்து மட்டும் ஒழுங்காக இருக்கும்.
அப்போதும் இரத்தக் கொதிப்பு இருந்தது. ஆனாலும் அதன் தோற்றமே இல்லை.
ஒரு `அல்டோமட்’ மாத்திரையைப் போட்டபடி போய்க்கொண்டே இருப்பேன்.
ஒரு டாக்டருக்குத் தெரியாத அளவு மாத்திரைகள் எனக்குத் தெரியும்.
உடம்பு பொத பொதவென்றிருக்கும்; முகம் வீங்கி இருக்கும்; ஆனால், எதை நினைத்தாலும் எழுத முடியும்.
தமிழ் மொழி, நாக்கில் புரண்டு விளையாடும்.
ஒன்றா? இரண்டா?
பன்னிரண்டு வயதிலேயே போகத்தை தொடங்கியவன்.
`பெத்தடின்’ பழக்கம் எனக்கு ரோகமாயிற்று.
கடந்த மூன்றாண்டு காலமாக, இறைவன் என்னை யோகத்திற்கு தள்ளுகிறான்.
உப்பு அளவோடு; உறைப்பு கூடவே கூடாது; புளி, எலுமிச்சம்பழம் ஆகவே ஆகாது.
காய்கறிகளில் வெண்டைக்காய், புடலங்காய்களைத் தவிர வேறு காய்கறிகளைச் சாப்பிட முடியாது.
இறைச்சி இல்லை; மீன் மட்டுமே.
இட்லியும், தோசை மாவும் கூடப் புளிக்கக் கூடாது.
இருநூற்று இரண்டு பவுண்டு எடை இருந்தவன், நூற்று அறுபத்து எட்டுக்கு வந்து விட்டேன்.
ஆனாலும் இதுவும் ஒரு வசதியாகவே இருக்கிறது.
அத்தனை ஆஸ்பத்திரிகளிலும் சோதித்தேன்; உடம்பில் ஒரு நோயும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.
இரத்தத்தில் சர்க்கரை நூறுதான் இருக்கிறது; கொழுப்பு நூற்று நாற்பதுதான் இருக்கிறது.
ஆனால், திமிர் பிடித்த ஆசைகள் போய்விட்டன.
தினமும் பெண்களைப் பற்றிச் சிந்திப்பதும், அறவே நின்று போய்விட்டது.
படிக்கலாம் என்று நினைத்தால் `செளந்தர்ய லஹரி படிக்கலாமா, லலிதா சகஸ்ரநாமம் படிக்கலாமா, விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாமா’ என்று தோன்றுகிறது.
ஒன்றும் எழுதாமல் இருந்தால், `ராமானுஜர் நாடகம் பார்க்கலாமா, பார்த்தசாரதி கோயிலுக்குப் போகலாமா’ என்று தோன்றுகிறது.`நோயே இல்லை’ என்று டாக்டர்கள் கூறிய பிறகும் கூட, ஏதோ சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு விட்ட பிரமை உண்டாகிறது.
நான் விரும்பியோ, விரும்பாமலோ, ஒரு யோகியின் நிலை என் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த எட்டு மாதங்களாக அந்த நிலை வளர்ந்து வருகிறது.
முன்பெல்லாம் மது அருந்தினால், அதில் ஒரு அற்புதமான சுகம் இருந்தது. இப்போது வெறுப்புத் தோன்றுகிறது.
முன்பு அனுபவிக்கக் குடித்தேன்.
இப்போதுதான் உண்மையிலேயே சூழ்நிலைகளை மறக்கக் குடிக்க வேண்டியதிருக்கிறது.
ஆனால், கொஞ்ச நாட்களாக குடியின் மீதும் வெறுப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
மது, மாமிசம், மங்கை இம்மூன்றிலிருந்தும், பகவான் என்னை விடுவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.
அளவுக்கு மீறிய போக காலம், ஐம்பதிலேயே முடிந்து விடுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, நான், ஆனால், பலன், வேண்டும், கூடாது, இருந்தது, பன்னிரண்டு, தோன்றுகிறது, நாம், அந்த, இருக்கிறது, என்பது, சாப்பிட, `கருமம்&, இல்லை, எந்தப், பெற்றுக், இரண்டு, முடியாது, வாங்கிக், பகவான் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்