முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » நல்ல மனைவி
அர்த்தமுள்ள இந்துமதம் - நல்ல மனைவி
அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.
நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.
தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும்
முட்டாளாகி விடுகிறான்; அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.
எல்லாம் சரி.
அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.
`தாயைப் பார்த்துப் பெண்ணெடு
தரத்தைப் பார்த்து வரவிடு
நிலத்தைப் பார்த்துப் பயிரிடு
நேரம் பார்த்து முடிவெடு’
என்பார்கள்.
“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார் கள்.
“தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.
தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.
அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதிவிலக்கு.
ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பார்க்க வேண்டியதில்லை.
இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங் களே அவன் நினைவை மயக்குகின்றன.
அதனால்தான் `பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.
பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி
முடிக்கிறார்கள்.அத்தகைய திருமணங்கள் நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
ஆத்திரத்தில் காதல்
அவசரத்தில் கல்யாணம்
என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.
ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும்.
காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை.)
குடிப்பிறப்புப் பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.
`குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.
எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.
நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி மதம் பார்ப்பது பயனற்றது.
குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.
இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அனுமன்,
ராமனிடம் இப்படிச் சொல்கிறான்:
“விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்த ளாய
நங்கையைக் கண்டே னில்லை;
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்!”
“ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.
குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும்
ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.
“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்”
என்றான் வள்ளுவன்.
“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.
ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.
நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டுவிட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும். மற்ற குணங்கள் தாய் வழியே
வந்திருக்கும்.பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.
நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்காரரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்
தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
“பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்
கூறா மற் சந்நியாசம் கொள்!”
“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்
போல்வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே
- தொண்டா
செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”
என்றாள் தமிழ் மூதாட்டி.
“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை
எடுத்(து)
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)
அயல்வளைவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப்
பின்வந்(து)
உறங்குவாளை எப்படி நான் நம்புவேன், இறைவா
கச்சி ஏகம்பனே!”
என்று புலம்பினார் பட்டினத்தார்.
சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்
தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது
என்கிறார்கள்.
“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.”
இதுவும் மூத்தோர் மொழி.
“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமில்லாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!
இந்துப்புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.
இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு
ஏற்பட்டுவிட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்ல, அவன், பெண்ணின், வேண்டும், நான், தொன்றும், இல்லாள், ஒன்றையும், பெண்களைத், என்பது, பெண், பெண்ணை, பார்த்து, குணங்கள், ஆகவே, திருமணங்கள் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்