மகா அவதார பாபாஜி - மகா அவதார பாபாஜி ஜோதிடம்
பாபாஜியின் அற்புதங்கள் அள்ள அள்ளக் குறையாதது. பாபாஜி, லாமா பாபா என்ற பெயரில் திபெத்தில் இருந்ததாகவும் அவரது சீடரான ஜவுக்ஷா லாமாவிற்கு நான்கு கைகள் கொண்ட சிவரூபத்தில் தரிசனம் தந்தார் என்றும் கங்கோத்ரி பாபா உறுதிப்படுத்துகிறார்.
பாபாஜியை தட்சிணாமூர்த்தி அம்சமாக 2500 வருடங்களுக்கு முன்பு கல் அக்னிநாத் என்ற பெயரில் தட்சிணாமூர்த்தியாகத் தோன்றினார் என்றும், அவரே குருகோரக்ஷாநாத் என்றும் சில புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நாத் பரம்பரையினர் அவரை சிவகோரக்ஷா என்றும், அவர் சிவபெருமான் அம்சம் என்றும் சொல்கிறார்கள்.
மகா அவதார் பாபாஜியை தனது மகா குருவாகக் கொண்டிருப்பவர் ரஜினி. அவரது அபூர்வ தரிசனத்தை அகத்தில் கண்டவர். பாபாஜியைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறியிருந்தாலும், மகா அவதார் பாபாவைப் பற்றி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ரஜினியின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான நாகராஜன் ராஜா சொல்வதைக் கேளுங்களேன். ‘‘மகா அவதார் பாபாவைப்பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ அதிசயங்கள் அற்புதங்கள் என்று பலவும் சொல்லியிருக்கிறார்கள்.
அவரைப் பற்றிய புதிருக்கான விடையை அவரே சொல்வது போல், எனக்கு ஓர் அற்புதத்தை நிகழ்த்தி என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது என் வாழ்நாளில் மறக்க முடியாத மிகப் பரவசமான சம்பவம்.
2008ம் வருடம் ஜூலை மாதம் நானும் என் மனைவியும், எனது நண்பரும் அவரது மனைவியும் ரிஷிகேஷ் சென்றுவிட்டு அங்கிருந்து பத்ரிநாத் சென்றோம்.
இரவு தரிசனம் முடித்துவிட்டு, மறுநாள் அதிகாலை அபிஷேகம் பார்க்கச் சென்றோம். அந்த சமயத்தில் மட்டும்தான் பத்ரிநாராயணர் தியான நிலையில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அபிஷேகம் ஆரம்பித்தது. எனக்கு பீடத்தில் பத்ரிநாராயணன் உருவம் தெரியவில்லை. சாட்சாத் பாபாஜியே அங்கே அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. மெய்சிலிர்க்க கண்களில் நீர் வழிய தரிசித்தேன்.
பிறகு கோவிலின் தலைமை அர்ச்சகரான நம்பூதிரியைப் பார்க்கச் சென்றோம். அவரது அறைக்குள்ளே சென்றவுடன், அங்கே இருந்த ஓர் ஓவியத்தின் மீது என் பார்வை பதிந்தது. அதில், நான்கு கைகளுடன் பாபாஜி தியான நிலையில் அமர்ந்திருப்பது போல் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது.
நம்பூதிரியைப் பார்த்து அந்த ஓவியம் பற்றிய விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் படபடத்தது. ஆனால், அவர் உடலநலம் சரியில்லாமல் படுத்திருந்ததால் அவரைப் பார்க்காமலேயே சென்னை திரும்பினோம். என் மனமோ அந்த ஓவியத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
சென்னை வந்தவுடன் முதல்வேலையாக என் நண்பர் ரஜினிகாந்த் அவர்களைப் பார்த்து பத்ரிநாத்தில் இருந்த அதிசய ஓவியத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆவலில் சென்றேன்.
ரஜினிகாந்தைப் பார்த்து ‘பத்ரிநாத்திற்குப் போய் வந்தேன்’ என்ற வார்த்தையை நான் முடிக்கும் முன்பு அவர் கேட்டார்... ‘‘பாபாஜியைப் பார்த்தீர்களா?’’
ஒரு விநாடி தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அவருக்கு எப்படித் தெரிந்தது? அவர் எதைச் சொல்கிறார்? பத்ரிநாராயணன், பாபாஜி போல் அமர்ந்திருப்பதைச் சொல்கிறாரா? என்று புரியாமல் விழித்தேன்.
புதிராகச் சிரித்தபடி தனது அறைக்குள் சென்றவர், வெளியில் வந்தபோது கையில் ஒரு படத்தோடு வந்தார். அந்தப் படத்தை அவர் என்னிடம் காட்டியபோது மேலும் அதிர்ந்து போனேன். பத்ரிநாத்தில் நம்பூதிரியின் அறையில் நான் பார்த்த விநோதமான பாபாஜி படம் அது!
‘‘இந்தப்படத்தைப் பற்றி சொல்லத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன். இது எப்படி உங்களிடம் இருக்கிறது?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
‘‘நீங்கள் ரிஷிகேஷ் போகிறீர்கள். எப்படியும் உங்களை பாபாஜி பத்ரிநாத்திற்கு அழைத்து விடுவார். அங்கு இந்தப் படத்தைப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கலாம். அதற்குப் பின்னர் இந்தப் படத்தைப் பற்றிய விபரத்தை உங்களிடம் கூறலாம் என்றிருந்தேன்’’ என்று சொன்ன ரஜினிகாந்த் பத்ரிநாத் அனுபவத்தை சொல்லத் தொடங்கினார்.
‘‘நான் பத்ரிநாத் சென்றிருந்தபொழுது, அங்குள்ள நம்பூதிரியைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றேன். அவரது அறையில் இருந்த இந்தப் படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து அதையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த நம்பூதிரி, ‘‘இந்தப் படத்தைப் பற்றிய ரகசியத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. ஏனோ, உங்களிடம் சொல்ல வேண்டும் என்று எனது உள் மனது சொல்கிறது’’ என்று கூறிவிட்டு சொல்ல ஆரம்பித்தார்.
‘‘எனக்கு முன் இருந்த நம்பூதிரியின் கனவில் இந்த உருவம் தோன்றி, ‘இந்தக் கோவிலில் பத்ரி நாராயணனாக நான் தான் இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். திடுக்கிட்டு எழுந்த அவர், தனக்கு இறைவன் கனவில் காட்டிய உருவத்தை அப்படியே ஓவியமாக வரைந்து வைத்துவிட்டார்.
அன்று முதல் இந்தப் படத்திலுள்ள தெய்வத்திற்கு பூஜை செய்தபிறகே பத்ரிநாராயணனுக்கு பூஜை செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது’’ என்று நம்பூதிரி கூறினார்.
மகா அவதார் பாபாஜியால் மக்களுக்கு கிரியா யோகத்தை அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட சீடர், ஸ்ரீலாஹிரி மகாசாயர். இல்லறத்தில் இருந்து கொண்டே யோக சாதனைகள் செய்து இறைவனோடு ஒன்ற முடியும் என்பதை மக்களுக்கு எளிதாக எடுத்துச் சொன்னவர் இவர். மகா அவதாரர் பாபாவை நேரடியாக தரிசித்த அவர், கிருஷ்ண பரமாத்மாதான் பாபாஜி என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அது நிதர்சனமான உண்மை என்பதை எனக்கு உணர்த்திவிட்டார் பாபாஜி.
ரஜினிகாந்த் மூலம் தன்னைப் பற்றிய இந்த உண்மை எனக்குத் தெரிய வேண்டும். என் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வேண்டும் என்பது பாபாஜியின் எண்ணமாக இருந்திருக்கிறது.
பாபாஜியின் அந்த அற்புதப் படத்தின் பிரதி ஒன்றை எனக்குக் கொடுத்து, மன நிறைவையும், அருமையான, உண்மையான விளக்கத்தையும் எனக்களித்த நண்பர் ரஜினிகாந்திற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எல்லாம் பாபாஜியின் செயல் தவிர வேறென்ன!
கலியுகத்தின் கடவுளாய், மகா அவதார புருஷராய்த் திகழும் பாபாஜி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். அவரது பெயரை ஒருமுறை உச்சரித்தாலே அவரது அபூர்வ ஞான சக்தி நமக்குள் பாய்வது போல் இருக்கும்.
பாபாஜி, காலத்தால் கட்டுப்படுத்த முடியாதவர். இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டவர். காரணம், காக்கும் கடவுளான பரம்பொருளே அவர்! பாபாஜியிடம் சரணடைவோம். அவர் நம்மை எங்கும் எப்போதும் காத்திடுவார்.
ஆர்.நாகராஜன்
நன்றி : மௌனம் (பாபாஜியின் சரிதை)
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகா அவதார பாபாஜி - மகா அவதார பாபாஜி ஜோதிடம் - Mahavatar Babaji Astrology - Astrology - ஜோதிடம்