நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 20
ராசிகளில் சர ராசி; ஸ்திர ராசி; உபய ராசி என்று இருக்கிறது என நாம் எழுதி இருந்தோம். மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். சரராசி என்றால் என்ன பொருள்? சரம் என்றால் இயங்கிக் கொண்டே இருப்பது என்று பொருள். ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள். உபயம் என்றால் ஒரேநிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள். இவைகள் எல்லாம் பலன் சொல்ல எப்படிப் பயன்படுகின்றன? உதாரணமாக ஒருகிரகம் ஒருவருக்கு உடல் உபாதையைக் கொடுக்கக் கூடிய கிரகமாக இருக்கிறது எனக் கொள்ளுவோம். அந்த கிரகம் சர ராசியில் இருந்தால் பரம்பரை நோய் வரக் கூடும். ஸ்திர ராசியில் இருந்தால் குணப்படுத்தாத முடியாத நோயாக வரக் கூடும். உபய ராசியில் இருக்கும் கிரகங்கள் மூலமாக அவ்வப்போது வந்து போகும் நோய் வரக்கூடும். இவ்வாறு இந்த ராசிகளின் தன்மைகள் பலன் சொல்லப் பயன்படுகின்றன. ஒருவர் ஜாதகத்தில் 4-ம் இடம் சர ராசியாக இருந்து அதன் அதிபதியும் சரராசியில் இருந்தால் அந்த ஜாதகருக்குப் பல இடத்தில் வீடுகள் இருக்கும். இது வீட்டுயோகம் உள்ளவர்களுக்குப் பொருந்தும். வீடுயோகம் இல்லாதவர்களுக்கு 4-ம் வீட்டு அதிபர் சரராசியிலும், 4-ம் வீடு சர ராசியிலும் இருந்தால் அவர் பல வீடுகளில் வசிப்பர் எனக் கொள்ளலாம். ஸ்திர ராசியில் இருந்தால் ஒரே வீட்டில் வசிப்பர் எனக் கொள்ளலாம்.
4-ம் வீட்டு அதிபர் 3-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபருடனோ சேர்ந்து இருப்பாரேயாகில் அவருக்கு சகோதரன் மூலமாக ஸ்திர சொத்துக்கள் கிடைக்கும். அதேபோல இலக்கினாதிபதி பலம் பெற்று 4-ம் இடத்திலும், 4-ம் வீட்ட்டதிபர் பலம் பெற்று இலக்கினத்திலும் இருந்தால் அவர் சுய முயற்சியில் வீடு கட்டுவர். சிலருக்கு மனைவி மூலமாக வீடு கிடைக்கிறது அல்லவா? அதற்கு எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்? களத்திர காரகனான சுக்கிரன் 4-ம் இடத்திலும், 4-க்குடையவன் 7-ம் இடத்திலும் இருப்பார்களேயானால் களத்திரம் மூலம் வீட்டு லாபம் உண்டாகும். சத்துருக்கள் மூலம் எப்படி பூமி லாபமுண்டாகுமெனப் பார்ப்போம். 6-ம் இடம் சத்துரு ஸ்தானம் அல்லவா? 6-ம் வீட்டதிபன் 4-ம் வீட்டிலோ அல்லது நாலாம் வீட்டதிபன் 6-ம் வீட்டிலோ இருந்து 4-ம் வீட்டதிபன் 6-ம் வீட்டதிபனை விட பலம் பொருந்தி இருந்தால் அவருக்கு விரோதிகளிடமிருந்து பூமிலாபம் கிடைக்கும்.
ஒருவருக்கு மாடி வீடு எப்படிக் கிடைக்குமெனப் பார்ப்போம்? நவாம்ச இலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இவர்களிருந்தால் மாடி வீடு கட்டுவர். அல்லது நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் உச்சமடைந்த கிரகமிருக்குமேயகில் அவருக்கும் மாடி வீட்டு யோகம் உண்டு. நாம் இதுவரையில் வீட்டு யோகத்திப் பற்றிப் பார்த்தோம். காரகத்துவங்களையும் இனிப் பார்ப்போம். தாயாரைக் குறிப்பதும் 4ம் வீடு அல்லவா? 4-ம் வீட்டிற்கதிபதி இலக்கினாதிபதியினால் பார்க்கப் பட்டு கேந்திரத்தில் இருந்தாலும், அல்லது சுபகிரகங்களினால் பார்க்கப் பட்டு இருந்தாலும் தாயரிடத்தில் மிக்க அன்புடன் இருப்பர். மாதுர்காரகனான சந்திரன் இரண்டு பாப கிரகங்களின் நடுவில் இருந்தால் அல்லது சேர்ந்து இருந்தால் மாதாவிற்குக் கெடுதல் உண்டாகும்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 20 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்