நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 14
ஜாதகத்தில் முதல் வீட்டிற்கு இலக்கினம் என்று பெயரென்று உங்களுக்குத் தெரியும். முதல்வீடு, நாலாம் வீடு, ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகியவை கேந்திரஸ்தானங்கள் என்றழைக்கப்படும். அதேபோல் ஒன்று, ஐந்து, ஒன்பதாம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் என்றழைக்கப்படும். இந்த கேந்திரஸ்தானங்களும், திரிகோணஸ்தானங்களும் மிக நல்ல வீடுகளாக அழைக்கப் படுகின்றன. இங்கே நல்ல கிரகங்கள் தங்கி இருப்பார்களேயானால் அவைகள் நல்லவைகளையே செய்யும். கெட்ட கிரகங்கள் தங்கி இருந்தால் அவைகள் அந்த வீட்டைக் கெடுத்து விடுகின்றன. அதாவது அந்த வீட்டின் காரகத்துவம் கெட்டு விடும். உதாரணமாக ஒருவருக்கு 5-ம் வீட்டில் சனி இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 5-ம் வீடு திரிகோணஸ்தானம் ஆகும். அந்த வீடு புத்திர பாக்கியத்தைக் குறிக்கிறது. அங்கு பாபக் கிரகமான சனி இருப்பதனால் அவருக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் போகும். குழந்தையே இல்லாமலும் போகலாம். "5-ல் சனி தத்துப் பிள்ளை யோகம்" என்று கூறுவார்கள். அங்கு சுபக்கிரகமான சுக்கிரன் இருந்தால் அவருக்குப் புத்திர பாக்கியம் இருக்கிறது எனக் கூறலாம். எந்த வீடாக இருந்தாலும் அங்கு சுபக்கிரகங்கள் அந்த வீட்டின் காரகத்துவத்தை மேம்படுத்துகின்றன. ஆனால் கெட்ட கிரகங்களோ அந்த வீட்டின்காரகத்துவத்தைக் கெடுத்து விடுகின்றன. ஒருவருக்கு ஜாதகத்தில் கேந்தரஸ்தானாதிபதியும், திரிகோணஸ்தானாதிபதியும் சேர்ந்து இருப்பார்களேயானால் அவர்கள் ராஜ யோகத்தைக் கொடுப்பர்கள். உதாரணமாக கன்னியாஇலக்கினத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுக்கிரனானவர் 9-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது திரிகோணஸ்தானாதிபதி. புதன் 10-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது கேந்திராதிபதி. இருவரும் சேர்ந்து ஒருவீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 4-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். இந்த சேர்க்கையானது இவருக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும். படிப்பு, வீடு, வாசல், யோகம் எல்லாம் இருக்கும். எந்த வீட்டில் ராஜயோக கிரகசேர்க்கை இருக்கிறதோ அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். 9-ம் வீடு, 10-ம் வீட்டின் அதிபதிகள் சேர்ந்தால் அது தர்ம, கர்மாதிபதியோகம் என அழைக்கப் படும். தர்மஸ்தானம் என்பது 9-ம் வீடு, கர்மஸ்தானம் என்பது 10-ம் வீடு. இருவீடுகளின்அதிபர் சேர்க்கை தர்ம, கர்மாதிபதி யோகம் என்றழைக்கப்படும்.
கடகஇலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாயானவர், 5-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதி. அதாவது கோண, கேந்திர வீடுகளுக்கு அதிபதி. 5-ம் வீடு திரிகோணஸ்தானம், 10-ம் வீடு கேந்திரஸ்தானம் அல்லவா! ஆகவே செவ்வாயானவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகன் என்றழைக்கப் படுகிறார். அதேபோல் செவ்வாயானவர் சிம்மஇலக்கினத்திற்கும் 4-ம் மற்றும் 9-ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார். கேந்திர, கோண வீடுகளுக்கு அதிபதியாவதால் அவர் சிம்ம இலக்கினத்துக்கும் யோக காரகனாகிறார். அதே போல் மகர, கும்ப இலக்கினங்களுக்கு சுக்கிரனானவர், கேந்தரஸ்தானத்திற்கும், திரிகோணஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் அவர் இந்த இரண்டு இலக்கினங்களுக்கும் யோககாரகனாகிறார். ரிஷப இலக்கினத்திற்கு சனியானவர் 9-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். துலாஇலக்கினத்திற்கும் சனியானவர் 4-ம் வீட்டிற்கும், 5-ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். இந்த யோக காரகர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். அதேபோன்று 2, 6, 8, 11-ம் வீடுகள் பணபரம் என்றும், 3, 12 வீடுகள் ஆபோக்லிபம் என்றழைக்கப்படும். இந்த வீடுகளைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். சரி!இப்போது நாம் விட்ட இடத்திலிருந்து முதலாம் வீட்டிற்கு வருவோம்.
இலக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவை ஒருவரின் ஆயுளைக் குறிக்கிறது. ஒருவரின் ஆயுளைக் கணிக்க இந்த மூன்று வீடுகளையும் ஆராய வேண்டும். ஒருவரின் ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள் எனப்படும். 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள் எனப்படும். 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள் எனப்படும். சரி! ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது? இது மிகவும் கடினமான வேலை. ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் தீர்க்க ஆயுளைக் காட்டுகின்றன.
1. இலக்கினதிபதி தன் சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இருத்தல்.
2. 8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருத்தல்.
3. இலக்கினமும், சந்திரனும் நல்லவர்கள் சேர்க்கை பெற்றிருத்தல்.
4. இலக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருத்தல்.
5. இலக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
6. எட்டாம் வீட்டிற்கதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது இலக்கினத்திலோ இருத்தல் அல்லது ல்க்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்
7. சந்திரனும், இலக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருத்தல்.
8. குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்.
இதைப் போல் பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நாம் கூறியுள்ளோம். நமது வாசகர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் பார்த்தால் ஆயுளைப் பற்றி விரிவாகக் கூறி இருப்பது தெரிய வரும்.
கீழே கூறியுள்ளவைகள் அற்ப ஆயுளைக் காட்டுகின்றன.
1. 8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும், 6, 12 வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.
2. இலக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
3. இலக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும்,
6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,
4. பொதுவாக இலக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள்
இருந்து சுபர் பார்வை இல்லாவிட்டாலும் அற்ப ஆயுள்தான்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 14 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்